விருபா

தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு

RSS
  • Home
  • About
  • Contact

புலமை - தமிழ் ஆய்விதழ் (Journal of Tamilology)

2006-12-30 by விருபா - Viruba | 1 கருத்துகள்
புலமை
தமிழில் வெளியாகும் ஆராய்ச்சி/ஆய்வுரை இதழ் புலமை ஆகும்.

1970களில் முனைவர் பொற்கோ அவர்கள் இலண்டன் பல்கலைக் கழகத்தில் கீழைக்கலையியல் ஆப்பிரிக்கவியல் ஆய்வு நிறுவனத்தில் பணியில் இருந்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தவேளையில் அங்குள்ள பல நூலகங்களில் பல்வேறு மொழிகளுக்கான ஆராச்சி இதழ்கள் உலகளாவிய உயர்ந்த தரத்துடன் இருந்த நிலையில், இலண்டன் பல்கலைக் கழகத்திலும், பிபிசி வானொலியிலும், ஆக்ஸ்போர்டு நூலகத்திலும் தமிழ்
இடம்பெற்றிருந்தாலும்,தமிழிற்காக எந்த ஒரு ஆராய்ச்சி இதழும் இல்லாத குறையைக் கண்டு மனம்வருந்தி, இந்தியா திரும்பிய பின்னர், 1975 இல் தனது நண்பர்களின் துணையுடன் அறிஞர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் புலமை என்னும் ஆராய்ச்சி இதழாகும்.

ஆரம்ப நாட்களில் காலாண்டிதழாக வெளிவந்த புலமை சில வருடங்களின் பின்னர் அரையாண்டிதழாக மாறியது. பின்னர் இருமொழி இதழாக மாறியது,இதனால் தமிழ் தெரியாத ஆங்கிலமறிந்த மொழி ஆராச்சியாளர்களின் கவனத்தையும் பெற்றது. இதழ் வெளிவரும் கால இடைவெளி மாறினாலும் கட்டுரைகளின் தரத்திலும் இதழ் அமைப்பிலும் எந்தவித குறைகள் இன்றி மேலும் மேலும் பொலிவு பெற்று வளர்ந்து வந்துள்ளது.

இப்படியொரு இதழ் வெளிவரவேண்டும் என்ற எண்ணத்தை முனைவர் பொற்கோ அவர்களின் மனதில் ஏற்படுத்திய இடமான பிரிட்டிஷ் நூலகத்திலும் புலமை இடத்தைப் பெற்றுளது.

புலமை இதழ் வெளிவருவதில் தமிழ் ஆர்வலர்கள்,அறிஞர்களின் பங்கு அளப்பரியது.

திரு.மெய்யப்பன்,
முனைவர் கி.அரங்கன்,
முனைவர் கே.எஸ்.கமலேஸ்வரன்,
முனைவர் சூ.க.சுப்பிரமணியன்,
முனைவர் இராம சுந்தரம்,
முனைவர் ஆர்.பெரியாழ்வார்,
பேராசிரியர் சி.மெய்கண்டன்,
முனைவர் சாமி,
அறவாணன்,
பொறியிலாளர் அ.மெய்யப்பன்,
மு.கந்தசாமி

ஆகியோரின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை.

ந.அரணமுறுவல் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து புலமையை அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

பேராசிரியர் சஞ்சீவி, பேராசிரியர் முத்துசண்முகனார், பேராசிரியர்.மெ.சுந்தரம், மேராசிரியர் வ.சுப.மாணிக்கம், பேராசிரியர் அகத்தியலிங்கனார், பேராசிரியர் செ.வை.சண்முகம் முதலான் அறிஞர் பெருமக்கள் மிகுந்த அக்கறை காட்டினார்கள். தமிழாராச்சியில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களும், அறிஞர்களும், ஆய்வாளர்களும் பலமை இதழைப் போற்றிப் பாராட்டிப் பயன்படுத்தினர்.

புலமை ஆய்வுரைக் கட்டுரைகளை வெளியிடுவது மட்டுமல்லாமல் சில அரிய நூல்களையும் வெளியிட்டுள்ளது. சில அரிய கட்டுரைகளையும், அரிய குறுநூல்களையும் புலமை மறுவெளியீடு செய்துள்ளது. புலமையின் சார்பில் 1980 இல் புலமை வட்டம் என்னும் அமைப்புத் தொடங்கப்பட்டு,அவ்வமைப்பு மூலம் பல கருத்தரங்குகளும் சிறப்புரைகளும் நடத்தப்பட்டன.

புலமைக்கு பின்னர் சில ஆராய்ச்சி இதழ்கள் தமிழ் நாட்டில் தொடங்கப்பட்டு சில காலங்களுக்கு வெளிவந்துள்ளன. அவையாவன -
"மொழியியல்",
"நாட்டுப்புறவியல்",
"கலை",
"இமயமும் குமரியும்".


புலமைக்கு முன்னராக வானமாமலை அவர்களால் தொடங்கப்பட்ட "ஆராய்ச்சி" என்னும்
ஆய்விதழும் சில காலங்களுக்கு வெளிவந்துள்ளமையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழியல் ஆராய்ச்சி
புலமை தற்போது புலமை மன்றமாக மாற்றமடைந்துள்ளது, புலமை மன்றம் இப்பொழுது "தமிழியல் ஆராய்ச்சி" என்ற பெயரில் ஆய்வுரைத் தொகுப்புகளை நூல் வடிவில் ஆண்டிற்கு இரண்டு முறை வெளியிட்டு வருகிறது. இதுவரையில் பத்துத் தொகுதிகள் வெளிவந்துள்ளது. புலமையின் பணி தொடர்கிறது.


தமிழ்க்கொடை

2006-12-21 by விருபா - Viruba | 0 கருத்துகள்
சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ் மண் பதிப்பகத்தார் தமிழிற்கு தொண்டாற்றிய பல அறிஞர்களின் நூல்களை புதிதாக பதிப்பித்து வருகிறார்கள். மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை, நுண்கலைஞ் செல்வர் சாத்தன்குளம் அ.இராகவன், ஈழத்து தமிழறிஞர் ந.சி.கந்தையா, வெ.சாமிநாத சர்மா,புலவர் இரா.இளங்குமரனார் ஆகிய தமிழறிஞர்க்ளின் அனைத்து நூல்களையும் தொகுப்புக்களாக ஏற்கனவே பதிப்பித்துள்ளார்கள்.

தற்சமயம் தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரம் அவர்களுடைய காலம் போற்றும் 54 நூல்கள் அனைத்தையும் 24 தொகுதிகளாக புதிய பதிப்பாக வெளியிடவுள்ளார்கள்.

தமிழ்க்கொடை

2007.01.08 அன்று இந்நூல்கள் பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் சென்னை தியாகராய நகர், ஜி.என் செட்டி சாலையில் அமைந்துள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் நடைபெறும் விழாவில் வெளியிடப்படவுள்ளன.

3800.00 ரூ பெறுமதியான இந்நூல்களை முன் பதிவுத் திட்டத்தில் 31.12.2006 இற்கு முன்னராக பதிவு செய்வதன் மூலம் 2500.00 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும்.

இந் நூல்களைப் பெற விரும்புவோர் தமிழ் மண் பதிப்பகத்தாருடன் நேரடியாக தொடர்புகொள்ளவும்.


ஈழம் - சோலையின் புதிய புத்தகம்

2006-12-16 by விருபா - Viruba | 0 கருத்துகள்
மூத்த பத்திரிகையாளர் சோலை
தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் சோலை திண்டுக்கல் மாவட்டம் அய்யன்பாளையத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். பத்திரிகைத் துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்தை உடையவர். ஜனசக்தி, தீக்கதிர், நவமணி, அலை ஓசை, மக்கள் செய்தி, அண்ணா ஆகிய நாளிதழ்களில் தொடர்ந்து அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதியவர்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அண்ணா நாளிதழில் 9 ஆண்டுகள் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர்.

தமிழகத்தில் உள்ள இதழ்களில், நாளேடுகளில் அதிகமான அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதியவரும் இவரே.

புரட்சித் தலைவருக்கும் அமரர் ஜீவாவிற்கும் உற்ற நண்பனாக இருந்தவர்.

இவரது கட்டுரைகளை வெளியிடுவதன் மூலம் தங்களின் வாசகர் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்ட பத்திரிகைகள் பல உண்டு. மக்கள் பிரச்சனைகளில் இவர் எழுதிய எழுச்சி மிகு எழுத்துக்கள் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன. மாற்றுக் கருத்துக் கொண்டோரும் மதிக்கும் வண்ணம் பிரச்சனைகளை தீர்க்கமாகவும் தொலைநோக்குப் பார்வையுடனும் எழுதுவது
இவரது சிறப்பு. ஆளுவோரின் கோபங்களுக்கு அஞ்சியோ அல்லது வேறு எவரின் தயவை நாடியோ இவர் தனது எழுத்துக்களை முடக்கியதில்லை. தமிழக பத்திரிகையாளர்களும் அரசியல் தலைவர்களும் இவருடன் பழகாதவர்கள் என்று எவரையும் கூறிவிடமுடியாது.

ஈழப் பிரச்சனை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் பல்வேறு கோணங்களில் விமர்சித்து கட்டுரைகள் எழுதியுள்ள நிலையில் இவர் ஈழம் குறித்து தெளிவான முறையில் "ஈழத் தமிழர்கள் யார்?" என்ற கேள்வியுடன் கட்டரையை ஆரம்பித்து தற்போது ஈழத்தில் நிகழும் போர் நிறுத்த மீறல்கள் வரை என்ன நடக்கின்றது? அதன் காரணங்கள் என்ன? என்று அலசி ஆராய்நது விளக்கியுள்ளார்கள்.

சோலை அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் நந்தன், தமிழ் ஓசை, குமுதம் ரிப்போட்டர் ஆகிய இதழ்களில் ஈழம் குறித்து எழுதிய கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்ட்டு நூல் வடிவம் பெற்றுள்ளது. 96 பக்கங்கள் கொண்ட இந்நூலை தணல் பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இதனை விலை 25.00 ரூபா ஆகும்.

ஈழம்

முன்னுரையில் பழ. நெடுமாறன்

.... தமிழ்நாட்டில் ஊடகங்களும், எழுத்தாளர்களும் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்பட்டவர்களாக பெரும்பாலும் இருப்பதால் தமிழீழப் பிரச்சனை மிகவும் கொச்சைப் படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பார்ப்பன ஊடகங்கள் இந்தப் பிரச்சனையை எந்த அளவிற்கு திரித்துக் கூறவேண்டுமோ அந்த அளவிற்கு திரித்தும், மறைத்தும் கூறுகின்றன. இந்தச் சூழ்நிலையில் நண்பர் சோலை அவர்கள் நடுநிலையுடன் நின்று ஈழத்தமிழர் பிரச்சனையை முழுமையாக உள்வாங்கி அதனுடைய முப்பரிமாணத்தையும் தமிழக மக்கள் நடுவில் கொண்டு சென்றிருக்கிறார். அதற்காக அவரை தமிழர்கள் அனைவரும் பாராட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை.

ஊடகங்கள் மட்டுமல்ல அகில இந்தியக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்கூட இந்தப் பிரச்சனையை முழுமையாகப் புரிந்து கொள்ளாமலேயே அதற்கு எதிர்நிலை எடுத்திருப்பது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் நண்பர் சோலையின் எழுத்துக்கள் அவர்களைப் போன்றவர்களை நிச்சயமாகத் தெளிவித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய அரசிற்கும், தமிழக அரசிற்கும் தனது எழுத்தின் மூலம் தக்க வழியைக்காட்டியிருக்கின்றார். ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தனது வலிமையான எழுத்தின்மூலம் ஆதரவு திரட்டிவரும் அவருக்கு ஈழத் தமிழர்கள் நன்றி கூறக் கடமைப் பட்டவர்கள்.

இந்த நூலில் அவர் அவ்வப்போது பல பத்திரிகைகளில் தமிழீழப் போராட்டம் பற்றி எழுதியுள்ள கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. தமிழ் நாட்டு மக்கள் ஈழப் பிரச்சனையை தெளிவாகப் புரிந்துகொள்ள இக்கட்டுரைகள் உதவியிருக்கின்றன. இவற்றை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டால் இந்தியாவின் பிற்பகுதிகளில் வாழ்பவர்களும் இந்தப் பிரச்சனையை உணர்ந்து கொள்ள வழிபிறக்கும்.

முதிர்ச்சி பெற்ற எழுத்தாளரான நண்பர் சோலை அவர்களின் இந்த நூலினை வாங்கிப் படிப்பதோடு மற்றவர்களுக்குப் பரப்புரை செய்ய வேண்டும் என தமிழர்களை வேண்டிக்கொள்கிறேன்.


மணாவின் புதிய 3 நூல்கள்.

2006-12-15 by விருபா - Viruba | 1 கருத்துகள்

தற்பொழுது புதிய பார்வை இதழின் ஆசிரியராகக் கடமையாற்றும் எழுத்தாளர் மணா தமிழில் பிரபலமான பல பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளவர்.

தமிழகம்; பிரச்சனைக்குரிய முகங்கள்,
தமிழகத் தொழில் முகங்கள்,
தமிழர்கள் மறந்ததும் மறக்காததும்

என்ற இவரது மூன்று நூல்களுமே இரண்டாம் பதிப்பைக் கண்டவை.

இவரது மூன்று புதிய நூல்கள் விரைவில் வெளிவர உள்ளன.



1.ஆளுமைகள்-சந்திப்புகள்-உரையாடல்கள்
ஆளுமைகள்-சந்திப்புகள்-உரையாடல்கள்

புதிய பார்வைக்காகவும், இதற்கு முன் அவர் பணியாற்றிய தீராநதிக்காகவும் பல்வேறு சந்தர்ப்பங்களில், சமூக கலை, இலக்கியம் சார்ந்த ஆளுமைகளுடன் (தொ.பரமசிவன், கே.ஏ.குணசேகரன், மு.கருணாநிதி, கமலஹாசன், பாரதிராஜா, கோவை ஞானி, பொன்.சத்தியநாதன், என்.வி.சுப்பராவ், கி.வீரமணி, பா.செயப்பிரகாசம், சுந்தர ராமசாமி, பிரேமிள், ஜெயமோகன், கவிஞர் சேரன், ஆ.சிவசுப்ரமணியன், காஞ்சனா தாமோதரன், மருது, பிரபஞ்சன், ஆதிமூலம், சுப்பு ஆறுமுகம், தொல்.திருமாவளவன், தமிழண்ணல், ஜவாஹிருல்லாஹ், இரா.செழியன், கொளத்தூர் மணி, தா.பாண்டியன், அருள்மொழி, தமிழருவி மணியன், கி.பி.அரவிந்தன், நல்லகண்ணு.) தான் பேட்டி கண்டு எழுதியவற்றை ஆளுமைகள்-சந்திப்புகள்-உரையாடல்கள் என்ற பெயரில் நூல் வடிவில் தந்துள்ளார்.

இவ்வுரையாடல்கள் அனுபவம் சார்ந்தும், கருத்துக்கள் சார்ந்தும் புதிய வெளிச்சங்களைத் தருகின்றன.

2.ஊர்மணம்

ஊர்மணம்

தமிழகத்தின் பல்வேறு ஊர்கள் குறித்து அம்மண்ணின் மைந்தர்கள், பல்வேறு துறைசார்ந்த பிரபல ஆளுமைகள் தங்களின் மனப்பதிவுகளை இந்நூலின் மூலம் முன்வைக்கிறார்கள்.

3.தமிழ் மண்ணின் சாமிகள்
தமிழ் மண்ணின் சாமிகள்

உலகமயமாதலும் மதவாதமும் சிறு பிராந்திய பண்பாடுகளை வேகமாக அழித்துவரும் வேளையில் இந்நூல் தமிழக மண்ணின் பன்முக பண்பாட்டுவேர்களைத் தேடிச்செல்கிறது.


செந்தமிழ்ச் செல்வி

2006-12-12 by விருபா - Viruba | 3 கருத்துகள்
செந்தமிழ்ச் செல்வி


பல ஆண்டுகளாக பல்வேறு அரிய தமிழ் நூல்களைப் பதிப்பித்த பெருமை மிக்க திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக உரிமையாளர் தாமரைச்செல்வர் வ.சுப்பையா பிள்ளை அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்த பெருமைக்குரிய செந்தமிழ்த் திங்கள் இதழ் செந்தமிழ்ச் செல்வி ஆகும்.

தமிழகத்தில் வெளிவரும் இதழ்களில் அதிக வயதுடைய இதழ் இதுவேயாகும்.

தற்பொழுது வ.சுப்பையா பிள்ளை அவர்களின் மருமகனுமமாகிய இரா.முத்துக்குமாரசுவாமி அவர்கள் செந்தமிழ்ச் செல்வியின் ஆசிரியராக இருந்து இதழினை தரம்குறையாமல் சிறப்பாக வெளியிடுகின்றார்.

பொற்கோ என்று அன்புடன் அழைக்கப்படும் முனைவர் பொன்.கோதண்டராமன்,
முனைவர் தமிழண்ணல்,
முனைவர் க.ப.அறவாணன்,
முனைவர் கு.சுந்தரமூர்த்தி
இலக்கியச் செம்மல் இரா.இளங்குமரன்,
முனைவர் கவிமாமணி வேலூர் ம.நாராயணன்,
டாக்டர் புரட்சிதாசன்

ஆகியோரின் வழிகாட்டுதலில் இவ்விதழ் புதுப் பொலிவுடன் வெளிவருகிறது.


பாரதியின் 125 வது பிறந்ததினம்

2006-12-11 by விருபா - Viruba | 0 கருத்துகள்
125 வது பிறந்ததினம்

படம்:வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணனின்(கே.எஸ்.ஆர்) கரிசல் காட்டின் கவிதைச்சோலை பாரதி நூலின் அட்டையிலிருந்து ஓவியர் ட்ராஸ்கி மருதுவின் ஓவியம் - நன்றி


"ஈ" பிரச்சனைக்குரியதா?

2006-12-10 by விருபா - Viruba | 1 கருத்துகள்
ஈ-1

ஈ-2

எமது தளத்திலும் தீர்வு காணப்படமுடியாத பிரச்சனை என்றால் அது "ஈ" பிரச்சனைதான். சுந்தரவடிவேலும் அண்மையில் "ஈ" பற்றி ஒரு விளக்கம் கேட்டிருந்தார். சரி அது அச்சில்/வடிவத்தில் உள்ள பிரச்சனை என்றால், நாங்கள் பாதிக்கப்படுவது இணைய "ஈ" ஒழுங்காக வரிசையில் வர மறுக்கும் அதன் பிடிவாத குணத்தால்.

நாங்களும் எங்கள் தளத்தில் யாரையும் முன்னிலைப்படுத்தாமல் அகர வரிசையில் எல்லாவற்றையும் பட்டியலிட்டுள்ளோம். ஆனால் இந்த "ஈ" எங்களின் ஆணைகளுக்கு கட்டுப்படாமல் தான் விரும்பும் இடத்தில் போய் நின்றுகொள்கிறது. பல தடவைகள் எங்கள் செயலியின் அகர வரிசை ஆணையை பல வடிவங்களில் மாற்றி அமைத்தாலும் "ஈ" சரிவர இயங்க மறுத்து தன் விருப்பப்படியே இயங்குகின்றது. அத்தோடு "ஈ" தன்னுடன் சேருபவர்களையும், உதாரணமாக "க" சேரும் போது உருவாகும் "கீ", "சீ",..... போன்றவர்களையும் கெடுக்கின்றது.

புத்தகங்களைத் தேடும் பகுதியிலும், வாசகர் கருத்துக்கள் பகுதியிலும் உள்ள இந்தப் பிரச்சனைக்கு யாரவது தீர்வு தருவீர்களா?

இணையம்

தாயகம்

2006-12-07 by விருபா - Viruba | 0 கருத்துகள்
யாழ்ப்பாணம் கொக்குவிலில் இருந்து வெளிவரும் கலை, இலக்கிய,சமூக, விஞ்ஞான காலாண்டிதழ் தாயகம் ஆகும்.

தாயகம்

இதன் ஆசிரியர்:க.தணிகாசலம்


வலி - அறிவுமதியின் புதிய நூல்

2006-11-28 by விருபா - Viruba | 2 கருத்துகள்
இலங்கை ராணுவத்தின் அகோரத் தாக்குதல்களில் உடைமைகளை இழந்து, தப்பிப்பிழைத்து, நள்ளிரவில் இரு நாட்டு கடற்படைகளின் கண்ணில் படாது கடல் கடந்து, தமிழ் நாட்டிற்கு வந்து சேரும் ஈழத்தமிழ் மக்களின் துயர்களைக் கவிஞர் அறிவுமதி அவர்கள் கவிதைகளாக வடித்து நூல் வடிவில் தந்துள்ளார்.


வலி - அறிவுமதியின் புதிய நூல்

இந்நூலிற்கு வழங்கப்பட்டுள்ள முன்னீடுகளில் இருந்து.......

நெகிழ்வுரை - இரா. நல்லகண்ணு

இலங்கையிலிருந்து தப்பிப்பிழைத்து, கடல் கடந்து இந்தியக்கரையில் சேர்ந்த ஈழத்தமிழ் மக்களின் துயர்களைக் கவிஞர் அறிவுமதி அவர்கள் கவிதைகளாக வடித்துத்தந்திருக்கிறார்.

இதை வெறும் உணர்ச்சிச் சொற்களால் சேர்க்கப்பட்ட கவிதைகளாக அல்ல; அக்கறையுள்ள ஒரு கவிஞன் நெஞ்சிலிருந்து கசிந்து சொட்டும் இரத்த திவலைகளாகவே உணர முடிகிறது .

உலகில் பல்வேறு நாடுகளில் ஆளும் பாசிச சக்திகளால் பாதிக்கப்படும் மக்கள், தப்பிப் பிழைத்து வாழத்துடிக்கிறார்கள். பிறந்த மண்ணிலிருந்து வெளியேறி எங்காவது ஓடிப்போய் உயிர் வாழலாமென்று நினைத்து புலம்
பெயர்ந்து செல்கிறார்கள். இவர்கள் அகதிகளாகக் கருதப்படுகிறார்கள். உலகெங்கும் அகதிகள் பிரைச்சனையும் குடிமக்களின் பிரைச்சனையாகக் கருதப்பட வேண்டுமென்று உலக மனித உரிமை அமைப்புகளும், செஞ்சிலுவைச்சங்கமும் அங்கீகரித்துள்ளன.

அதில் நாட்டுக்கு நாடு ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. திபத்திலிருந்து வெளியேறி வந்த புத்த பிட்சு தலாய்லாமாவும் அவரைச் சேர்ந்தவர்களும் இந்திய நாட்டின் மரியாதைக்குரிய அகதிகளாக ராஜோபசாரத்துடன் நடத்தப்படுகிறார்கள். கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தங்கியிருக்கிறார்கள். பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தில் வாழ்கிறார்கள்.

இலங்கை இனப்பிரச்சினை கடந்த கால் நூற்றாண்டாக நீடித்து வருகிறது. இலங்கை அரசு இனப்பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது.

19ஆவது நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியில் வேலையாட்களாக இந்தியாவில்லிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள் மலைகளில் தேயிலைத் தோட்டம் போட்டுக்கொடுத்தார்கள். நாடுகள் விடுதலை பெற்றதும் நாட்டைப் பண்படுத்திக் கொடுத்த இந்தியத் தமிழர்களை இலங்கை அரசு விரட்டியது. நாடற்ற தமிழர்களாகக் கருதப்பட்டார்கள். சாஸ்திரி பண்டாரநாயகா ஒப்பந்தம் நடந்தது. பல்லாயிரம் பேர் இந்தியாவில் தமிழகத்துக்கு வந்துநிரந்தர அகதிகளாக்கப்பட்டனர். பல்லாயிரம் தொழிலாளர்கள் இலங்கையில் மலையகத்தமிழர்களாக வாக்குரிமையற்றவர்களாக அறிவிக்கப்பட்டார்கள்.

ஈழத்தமிழர்கள் இலங்கையின் பூர்வக் குடிகள், அத்தீவின் பெருமைக்குரியவர்கள் மட்டுமல்ல; தமிழுக்கும் பலவகையில் பெருமை சேர்த்தவர்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய விபுலானந்த அடிகள் மகாகவி பாரதிக்கு விழா எடுக்கவேண்டுமென்று முதல் குரல் கொடுத்தவர்களில் முதன்மையானவர். ஆறுமுக நாவலர், கனகசபைப் பிள்ளை, ந.சி. கந்தையா இலக்கியத்தில் புதிய பார்வையைக் கொடுத்த பேராசிரியர்கள்; கைலாசபதி, சிவத்தம்பி, வேலுப்பிள்ளை போன்ற தமிழறிஞ்ஞர்கள் அரும்பெரும் சாதனை படைத்தவர்கள். டேனியல், டொமினிக் ஜீவா போன்றவர்கள் எழுத்திலக்கிய முன்னவர்கள்.

இத்தகைய பெருமை சார்ந்த மக்களின் வாரிசுகளான ஈழத்தமிழ் மக்கள் பிறந்த மண்ணில் வாழ முடியாமல் வெளியேறி உலகெங்கும் பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழ் மக்கள் தமிழ் நாட்டில் அகதிகளாக வாழ்கின்றார்கள். அவர்களின் துன்ப, துயரங்களை நினைத்து வேதனைப்படும் கவிஞர் அறிவுமதி தமிழ் அகதிகளின் மனத்துடிப்பைக் கவிதைகளாக வடித்திருக்கிறார்.

இராமேஸ்வரத்தில்
எல்லோரும்
குளித்துக்
கரையேறுகிறார்கள்

நாங்கள் குதித்துக்
கரையேறுகிறோம்.


இது கடல் கடந்து வந்தவர்களின் முதல் சோகம்.

அங்கே
அவனா
என்று கேட்டு
அடித்தார்கள்

வலிக்கவில்லை

இங்கே
திருடனா
என்று கேட்டு
அடிக்கிறார்கள்

வலிக்கிறது


இது இரண்டாவது சோகம்.


தமிழ் அகதிகள் வாழும் இடத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பது, நெஞ்சை உலுக்குகிறது.

நேற்று வரை
சேலைகள்
இன்றுமுதல்
சுவர்கள்


காதவழி தூரத்தில் உள்ளது யாழ்ப்பாணக்கரை. தமிழகத்தில் அடைக்கலம் கேட்டு வந்திருக்கும் தமிழ் அகதிகளைப் பார்த்துப் பார்த்து மரத்துப்போன நமது மனசாட்சியை உலுக்குகிறார் கவிஞர் அறிவுமதி.

பஞ்சம் பிழைக்க
மாநிலம்
தாண்டிப்போகிறோம்

உயிர் பிழைக்க
கடல் தாண்டி
வருகிறீர்கள்


- - - - - - - - -

முகாமிற்கு
அருகில் உள்ள
பள்ளியிலிருந்து
கேட்கிறது

யாதும் ஊரே
யாவரும் கேளிர்


இரு கவிதைகளும் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. பிஜித் தீவிலுள்ள கரும்புத் தோட்டத்தில் தமிழ்ப்பெண்கள் பட்ட துயரை மகாகவி பாரதி 1916 இல் பாடினார்.

நாட்டை நினைப்பாரோ - எந்த
நாளினில் போயதைக்
காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ - அவர்
விம்மி விம்மி விம்மி விம்மி யழுங்குரல்
கேட்டிருப் பாய்காற்றே

என்று.

இன்று 2006 இல் ஈழத்தமிழ் அகதிகளின் துயரத்தைச் சாரமாகக் கொடுத்திருக்கிறார் கவிஞர் அறிவுமதி. இன்னும் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாவிட்டாலும் தமிழ் மண்ணில் தஞ்சமடைந்த ஈழத்தமிழ் அகதிகளின் நல்வாழ்வுக்கு வழிகள் காண இக்கவிதைத் தொகுப்பு தூண்டுதலாக அமையும் என்று நம்புகிறேன்.

**********************


வலியுரை - காசி ஆனந்தன்


. . . . . .
பள்ளிக்குப் போன தர்ஷினி சிங்கள
வெறியர்களால் கடத்திக் கொலை
செய்யப்பட்ட பழைய நிகழ்ச்சி நெஞ்சை
மிதிக்கும்.

பொடிச்சி வருவாளா?

வலி

.......
படகு கிழியும்.

கடல் அலையின் பேரிரைச்சலை விழுங்கும்
கதறல்.

தமிழீழ உறவுகளின் உடல்கள் கடலில்
புதைக்கப்படும்

வலி

தமிழீழம் இந்த வலிகளின் இடையேதான்
விடுதலை நெருப்பில் தடம் பதிக்கிறது.

''வலி'' சுமந்து அறிவுமதி இந்நூலில் வருகிறார்.

எதைப்பற்றிய படைப்பானாலும் தமிழின்
உச்சத்தைத்த தொடுவது அறிவுமதி இலக்கியம்

அறிவுமதியின் ''வலி''யும் அப்படித்தான்.

**********************

உயிருரை - சீமான்

இந்த வலிகள் எனக்கான வலிகள் மட்டுமல்ல; அண்ணன் அறிவுமதிக்கான வலிகள் மட்டுமல்ல; அனைத்துத் தமிழர்களுக்குமான வலிகள்.

இங்கே
வீடு கிடைப்பதற்குள்
அங்கே
நாடு கிடைத்துவிடும்.

என்று அண்ணன் அறிவுமதி எழுதியிருக்கிறார். நாட்டுக்காக உயிரை விடுவது உத்தமம். ஆனால் அந்த உயிரை விடுவதற்கும்

ஒரு நாடு வேண்டுமல்லவா?

**********************

96 பக்கங்களில் நெஞ்சை உருக்கும் படங்களுடன், நேர்த்தியான சிறந்த கட்டமைப்புடன் வெளிவந்திருக்கும் இந்நூலை தமிழ்மண் பதிப்பத்தார் பதிப்பித்துள்ளார்கள். இதன் விலை 70 இந்திய ரூபா ஆகும்



அது ஒரு கனாக்காலம்

2006-11-22 by விருபா - Viruba | 0 கருத்துகள்
இயக்குநர் பாலு மகேந்திரா அவர்கள் இயக்கி வெளிந்த "அது ஒரு கனாக்காலம்" திரைப்படத்தின் திரைக்கதை நூல் வடிவம் பெற்றுள்ளது.


அது ஒரு கனாக்காலம்

விரைவில் வெளிவர இருக்கும் இந்நூலின் முன்னுரையில் இருந்து சில துளிகள்....

"அது ஒரு கனாக்காலம்" ஒரு முக்கியமான தேசிய விருது கிடைத்திருக்கக்கூடிய படம். இதன் "ட்ரான்ஸ்க்ரிப்ட்"டைப் படிக்கும் போது ஒரு
திரைக்கதை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான பல பயனுள்ள குறிப்புகள் திரைத்துறை மாணவர்களுக்கும், ரசிகர்களுக்கும் கிடைக்கின்றன.
- - சுஜாதா - -

"அது ஒரு கனாக்காலம்" திரைக்கதை நூல் வடிவில் வருவது, ஒரு நல்ல அறிகுறி. திரைப்படத்தின் இயல்பையும், அதில் கதைப் பாத்திரப்பேச்சின்
இடத்தை அறியவும், சினிமாவின் நியதிகளை, தனித்துவத்தை புரிந்துகொள்ளவும் இது பயன்படும்.
- - சு.தியோடர் பாஸ்கரன் - -

பாலு மகேந்திராவின் தேர்ந்த கதைகூறல்களும் நிகழ்வு அடுக்குகளும், பின்னணி நிலப்பரப்பும் படக்கதை வெறும் சினிமா என்ற தளத்திலிருந்து வகை மாதிரிக் குடும்பங்களின் மீதான விமர்சனம் என்ற தளத்திற்கு எடுத்துச் செல்கின்றன. மகனைத் தனது சொல்கேட்டு நடக்கவேண்டிவனாக மட்டுமே கருதுவதும், அவனது விலகல் போக்கு எதற்கும் தான் பொறுப்பில்லை என்று நடந்துகொள்வதுமான தந்தையர்களின் மீது, கடும் விமர்சனத்தை முன்வைக்கும் இப்படம், அத்தகைய பார்வையாளர்களை இலக்குப் பார்வையாளர்(target audience)களாகக் கணிக்கத் தவறிவிட்டது ஒரு குறைதான்.

இன்று, திரைப்படம் பார்க்க வரும் ரசிகக் கூட்டம் இளைஞர்கள்தான் என்பதைத் தீர்மானித்து, அவர்கள் விரும்பும் சில காட்சிகளை மட்டும் இணைத்து படத்தைத் தந்துள்ள இயக்குநர், சில காட்சிகளை நீக்கிவிட்டு வேறுவகையான காட்சிகளைச் சேர்த்திருந்தால்,குடும்பத்தோடு அல்லது பெற்றோர்களாகப் பார்வையாளர்கள் வந்திருக்கக்கூடும். ஊடகங்கள் தரும் பொதுப் புத்திசார்ந்த விமர்சனக் குறிப்புக்களை மட்டுமே நம்மிப் படம் பார்ப்பவர்களாக மாறிவிட்ட அவர்கள், தங்களுக்கான படம் வரும் போது அதைத் தவற விட்டுவிடுகின்றனர் என்பதுதான் உண்மை. சமூகப் பொது உளவியலை ஊடகங்கள் இவ்வாறுதான் கட்டமைத்துத் திசை திருப்புகின்றன. படுக்கையறைக்காட்சிகள் உள்ள படங்கள், விடலைகளுக்கான படங்கள்
என்று கருதி, பெரியவர்கள் தவிர்த்து விடுவதில் அதுதான் நடக்கிறது."அது ஒரு கனாக்காலம்" விடலைப் பருவத்து இளைஞர்களை வழிநடத்த்த தெரியாத பெற்றோர்களுக்கான படம் என்பதுதான் சரியானது.இந்த சமூக அக்கறைதான் அவரைப்படைப்பாளியாகவே இருக்க வைத்திருக்கிறது.
- - 2005 டிசம்பர் தீராநதியில் அ.இராமசாமி - -


இக்கதை நெடுக எளிமை பயணப்பட்டிருக்கிறது. ஒரு லாரி டிரைவரிடம் தன் கதையைச் சொல்வதிலிருந்து போலீஸ்காரன் சீனிவாசனைத் தப்பியோடிப் பிழைத்துக்கொள்ள கொள்ளச் சொல்வது வரை.

பார்வையாளன், வாழ்விலிருந்து தூண்டிக்கப்பட்ட ஒரு பகுதியிலிருந்து வருபவனைப் போலத்தான் திரைப்படத்தைக் காண வருகிறான். ஆனால் அவனை இடையூறுகள் எதுவுமின்றி வாழ்க்கைக்குள்ளே அழைத்துச் செல்ல முடிபவைதான் சிறந்த திரைப்படங்கள்.

இத்திரைப்படத்தில் நெடுக இருக்கும் எளிமை, பெரும்பாலோரைக் கவராது போனாலும் போகலாம். அது நிச்சயம் நம்முடைய தவறுதானே ஒழிய படைப்பாளியினுடையது அல்ல. அதிகமும் விசித்திரப் போக்குகள் கொண்ட கதாபாத்திரங்களைக் கதாநாயகர்களாகக் கண்டுகொண்டிருக்கும் நேரத்தில் நம்மைப்போலவே ஒருவனைப் பார்க்கும்போது நமக்கு அவன் நம்மிலிரிந்து மாறுபட்டவனைப் போலவே தோற்றம் தரலாம். இதன் விழுக்காடு அதிகமாக உள்ள பட்சத்தில் நாம் நமத் வாழ்வின் எதார்த்தத்தைப் புறக்கணித்து சுகமான கற்பனைகளை மட்டும் ரசிக்கும் அபாயத்தினுள் விழுந்துகொண்டிருக்கிறோம் என்பதுதான் நிஜம்.

எளிமை என்பது வறுமை அல்ல, கம்பீரம்; அல்லது அதுதான் உண்மையான பிரமாண்டம்.
- - 2005 டிசம்பர் காலச்சுவட்டில் ஜே.பி.சாணக்யா - -

216 பக்கங்களைக்கொண்ட இயக்குநர் பாலுமகேந்திராவின் "அது ஒரு கனாக்காலம்" புத்தகத்தின் விலை 95.00 இந்திய ரூபா ஆகும். இதனை மித்ர வெளியீடு பதிப்பித்துள்ளது.



திரு.வி.கல்யாணசுந்தரம்

2006-11-07 by விருபா - Viruba | 0 கருத்துகள்
திரு.வி.க வின் நூல்கள் தமிழ்க்கொடை
தமிழக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெறத்தக்க குறிப்புக்களைக்கொண்டுள்ளது. மொழியுணர்ச்சியும் கலையுணர்ச்சியும் வீறுகொண்டெழுந்த நிகழ்வு இந்நூற்றாண்டின் முற்பகுதியில் நிகழ்ந்தது. தமிழ்நாட்டின் வரலாற்றை, பண்பாட்டை வளப்படுத்திய ஆளுமைகளில் பன்முகத் தன்மை மிக்க தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரம் முதன்மையானவர். தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் மூலவர், தமிழ் உரை நடையின் வித்தகர், தமிழகத்தில் தொழிற்சங்க இயக்கத்திற்கு அத்திவாரம் இட்ட பெருமகனார், தந்தை பெரியாருக்கு வைக்கம் வீரர் என்று பெயரை சூட்டியவரும் இவரே.

சமயத் தமிழை வளர்த்தவர்; தூய்மை, எளிமை, புதுமை என்ற மூன்று நற்பண்புகளிற்காகவே வாழ்ந்து காட்டியவர்; உயரிய மனிதப் பண்புகளை அணிகலனாகக்கொண்டவர்; பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக அமைந்தவர்; தமிழகம் கண்ணாரக் கண்ட மகானாக அவர் வாழ்ந்த காலத்தில் சக சான்றோர்களால் மதிக்கப்பட்டவர்; கலப்புத் திருமணத்திற்கும், விதவை
மறுமணத்திற்கும் ஊக்கம் தந்தவர்; பெண்களுக்கு சொத்துரிமைக்காக பாடுபட்டவர்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை என்று வாதிட்டவர்; கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் உண்டு என்று வலியுறுத்தியவர்; இளமை மணத்தை எதிர்த்தவர்; தமிழக மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் என்று பல பெருமைகளிற்கு உரியவர் திரு.வி.கல்யாணசுந்தரம் ஆவார்.

திரு.வி.கல்யாணசுந்தரம் தமிழிற்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய தொண்டிற்கு சான்று கூறுபவை அவருடைய நூல்கள். ஐம்பதிற்கு மேற்பட்ட நூல்களைப் பன்முகப் பார்வையுடன் எழுதி தமிழர்களுக்கு அருந்தமிழ்க் கருவூலமாக தந்துள்ளார்.

ஆண் வர்கக்த்தின் வடிவமாக "தேசபக்தன்", பெண் வர்க்கத்தின் வடிவமாக "நவசக்தி" இதழ்கள்களை திரு.வி.க அவர்கள் உருவாக்கினார். தனது கருத்துக்களைப் பரப்புவதற்கு இவ்விரு இதழ்களையும் பயன்படுத்தினார். இவ்விரு இதழ்களினாலேயே மொழித்தூன்மையும், புதிய மொழி நடையும் தமிழக பத்திரிகைத் துறையில் ஏற்பட்டன.பொது மேடைகளில் தமிழில் பேசுவது சிறந்தது என்பதனை வலியுறுத்தி "தேசபக்தன்" செய்திகளை வெளியிட்டது, தொழிலாளர் இயக்கத்தை தோற்றுவிக்க துணை நின்றது.

திரு.வி.க வென்னும் பெயரில் திருவிருக்கும்
தமிழிருக்கும்! இனமிருக்கும்!
திரு.வி.க வென்னும் பெயரில் திருவாரூர்ப்
பெயரிருக்கும் இந்நாட்டில்!
திரு.வி.க வென்னும் பெயரால் தொழிலாளர்
இயக்கங்கள் செறிவுற்றோங்கும்!
திரு.வி.க வென்னும் பெயரால் பொதுச்சமயம்
சீர்திருத்தம் திகழுமிங்கே!

என்பது பாவலரேறு பெருஞ்சித்திரனார் வாக்கு.

தாம் சார்ந்த அரசியல் கட்சியில் ஊழல்கள் ஏற்படத் தொடங்கியதும், அரசியலில் இருந்து விடுபட முனைந்து திரு.வி.க வின் உள்ளம் சன்மார்க நெறியை நாடியது என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படியான பல பெருமைகளுக்கு உரிய திரு.வி.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு கல்விக் கண்ணை திறந்தவர் யாழ்ப்பாணம் நா.கதிரைவேற்பிள்ளை என்பதனை அவர் தனது வாழ்க்கைக் குறிப்புகளில் பதிவு செய்துள்ளார்.

தமிழ்க்கொடை

திரு.வி.க அவர்களின் 54 நூல்கள் 24 தொகுதிகளாக 2007 தமிழர் திருநாளில் வெளிவரவுள்ளது.

A.வாழ்க்கை வரலாறுகள்

1.நா.கதிரைவேற்பிள்ளை சரித்திரம் - 1908
2.மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் - 1921
3.பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை - 1927
4.நாயன்மார் வரலாறு - 1937
5.முடியா? காதலா? சீர்திருத்தமா? - 1938
6.உள்ளொளி - 1942
7.திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 1 - 1944
8.திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 2 - 1944

B.உரை நூல்கள்

09.பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும் - 1907
10.பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரையும் - 1923
11.காரைக்கால் அம்மையார் திருமுறை - குறிப்புரை - 1941
12.திருக்குறள் - விரிவுரை (பாயிரம்) - 1939
13.திருக்குறள் - விரிவுரை (இல்லறவியல்) 1941

C.அரசியல் நூல்கள்

14.தேசபக்தாமிர்தம் - 1919
15.என் கடன் பணி செய்து கிடப்பதே - 1921
16.தமிழ்நாட்டுச் செல்வம் - 1924
17.தமிழ்த்தென்றல் (அல்லது) தலைமைப்பொழிவு - 1928
18.சீர்திருத்தம் (அல்லது) இளமை விருந்து - 1930
19.தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 1 - 1935
20.தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 2 - 1935
21.இந்தியாவும் விடுதலையும் - 1940
22.தமிழ்க்கலை - 1953

D.சமய நூல்கள்

23.சைவசமய சாரம் - 1921
24.நாயன்மார் திறம் - 1922
25.தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 1923
26.சைவத்தின் சமசரசம் - 1925
27.முருகன் (அல்லது) அழகு - 1925
28.கடவுட் காட்சியும் தாயுமானவரும் - 1928
29.இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் - 1929
30.தமிழ் நூல்களில் பௌத்தம் - 1929
31.சைவத் திறவு - 1929
32.நினைப்பவர் மனம் - 1930
33.இமயமலை (அல்லது) தியானம் - 1931
34.சமரச சன்மார்க்க போதமும் திறவும் - 1933
35.சமரச தீபம் - 1934
36.சித்தமார்கக்ம - 1935
37.ஆலமும் அமுதமும் - 1944
38.பரம்பொருள் (அல்லது) வாழ்க்கை வழி - 1949

E.பாடல்கள்

39.உரிமைவேட்கை (அல்லது) நாட்டுப்பாடல் - 1931
40.முருகன் அருள் வேட்டல் - 1932
41.திருமால் அருள் வேட்டல் - 1938
42.பொதுமை வேட்டல் - 1942
43.கிறிஸ்துவின் அருள் வேட்டல் - 1945
44.புதுமை வேட்டல் - 1945
45.சிவனருள் வேட்டல் - 1947
46.கிறிஸ்து மொழிக்குறள் - 1948
47.இருளில் ஒளி - 1950
48.இருமையும் ஒருமையும் - 1950
49.அருகன் அருகே (அல்லது) விடுதலை வழி - 1951
50.பொருளும் அருளும் (அல்லது) மார்க்ஸியமும் காந்தியமும் - 1951
51.சித்தந் திருத்தல் (அல்லது) செத்துப் பிறத்தல் - 1951
52.முதுமை உளறல் - 1951
53.வளர்ச்சியும் வாழ்வும் (அல்லது) படுக்கைப் பிதற்றல் - 1953
54.இன்பவாழ்வு - 1925


பாவாணர் நினைவலைகள்

2006-11-03 by விருபா - Viruba | 0 கருத்துகள்
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் வாழ்க்கை வரலாறாக அவரது மகன் மணிமன்றவாணன் என்கிற தே.மணி அவர்கள் எழுதியுள்ள பாவாணர் நினைவலைகள் என்னும் நூல் வெ.கோவலங்கண்ணன் அவர்கள் தலைமையிலான பாவாணர் அறக்கட்டளை மூலம் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

பாவாணர் நினைவலைகள்
இந் நூல் 04.11.2006 அன்று, சென்னை தியாகராயர் நகர், கோபதி நாராயணன் சாலையில் (G.N.Chetty Road) அமைந்துள்ள வயவர் (சர்) பிட்டி தியாகராயர் அரங்கில் மாலை 5.00 மணிக்கு நடைபெறும் விழாவில் வெளியிடப்படவுள்ளது.

இவ் விழாவிற்கு சென்னைப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள் தலைமை தாங்கி இந்நூலினை வெளியிடுகின்றார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் க.ப.அறவாணன் அவர்கள் நூலின் முதற்படியினைப் பெற்றுக் கொள்கிறார்.

இந்நிகழ்வில் பாவாணரின் அருந்தமிழ்ப் பணிகளுக்குத் துணைநின்ற பாவாணரின் பெருந்தொண்டர்கள் ஐவர்க்குப் பாராட்டு நிகழ்சியும் நடைபெறும்.

  • சைவ சித்தாந் நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சியாளர் திரு.இரா .முத்துக்குமாரசுவாமி,

  • தென்மொழி இதழின் ஆசிரியர் திருவாட்டி தாமரை பெருஞ்சித்திரனார்,

  • தமிழ்ப்பாவை இதழின் ஆசிரியர் திரு அருளாளர் (கருணைதாசன்),

  • புன்செய் புளியம்பட்டி மறைமலையடிகள் மன்ற செயலாளர் புலவர் கா.இளமுருகன்,

  • மொழிபெயர்ப்புத் துறையின் மேனாள் துணை இயக்குநர் திரு கு.பாலசுப்பிரமணியம்,


  • ஆகியோர் பாராட்டுப் பெறுகின்றார்கள்.

      வரவேற்புரை : திரு மா.பூங்குன்றன்

      நூலாசிரியர் உரை : திரு தே.மணி

      நன்றியுரை : திரு வே.கோவலங்கண்ணனார்


    தமிழன்பர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்க அழைக்கப்படுகின்றார்கள்.


    மதராசபட்டினம் - நரசய்யாவின் புதிய புத்தகம்

    2006-10-29 by விருபா - Viruba | 0 கருத்துகள்
    1975ல் தமிழ்நாடு அரசு வெளியீடாக வந்த "தமிழ்நாட்டுத் தொல் பழங்கால வரலாறு" உட்பட பல பழைய நூல்களில் இருந்தும், மற்றும் ரிக்வேதம், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து, புறநானூறு, அகநானூறு, பெருங்கதை, சிலப்பதிகாரம், மணிமேகலை, வால்மீகி ராமாயணம், கவுடில்யரின் அர்த்த சாஸ்திரம், மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, கம்பராமாயணம் முதலியவற்றில் உள்ள குறிப்புக்களின் உதவியுடனும், தொல்பொருள் சான்றுகளை மேற்கோள் காட்டியும், எழுத்தாளர் நரசய்யா இலகு தமிழில், இந்திய கடல் வணிகம் பற்றிய பல பயனுள்ள தகவல்ளை உள்ளடக்கி எழுதிய, "கடல்வழி வணிகம்" என்னும் புத்தகம் கடந்த வருட இறுதியில் வெளியாகி பலரின் பாராட்டையும் பெற்றது.

    இதனைத் தொடர்ந்து எழுத்தாளர் நரசய்யா அவர்கள், தமிழ் நாட்டின் தலைநகராமாக தற்போது விளங்கும் சென்னை நகரைப் பற்றிய ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். 1600 முதல் 1947 வரையிலான பல நிகழ்வுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. "மதராசபட்டினம்" (ஒரு நகரத்தின் கதை 1600 - 1947) என்று பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகம் விரைவில் வெளியாவுள்ளது.

    மதராசபட்டினம்

    A4 அளவு தாளில் 250 பக்கங்களுடன், தரமான தாள்களுடன், நேர்த்தியான கட்டமைப்புடன் இப்புத்தகம் அமையவுள்ளது.

    சென்னை தினமாக கொண்டாடப்படும் ஆகஸ்ட்டு 22 அன்று (2006.08.22) இதனை வெளியிடுவதென்று விருப்பத்துடன் இதனை எழுதத் தொடங்கிய எழுத்தாளர் நரசய்யாவின் தேட்டையில் கிடைத்த அளவிற்கதிகமான தகவல்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து எழுதியதில் தாமதமாகியதாக கூறினார்.

    "கடல்வழி வணிகம்" புத்தகத்தை பதிப்பித்த பழனிப்பா பிரதர்ஸ் நிறுவனமே இப்புதிய புத்தகத்தையும் வெளியிடவுள்ளது.


    சாதனை படைக்கும் உடல் ஊனமுற்றவர்கள்

    2006-10-27 by விருபா - Viruba | 1 கருத்துகள்
    "ஊனம்.... உனமல்ல.

    இன்று உடல் ஊனமுற்றவர்கள் என்ற சொல்லையே அகராதியில் இருந்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் ''மாற்றுத்திறன் கொண்டவர்கள்'' என்ற மகத்தான சொல் அரங்கேறியுள்ளது. அவர்கள் அங்கம் பங்கப்படாத எந்த மனிதருக்கும் இளைத்தவரோ அல்லது சளைத்தவரோ அல்லர் என்பதை நிரூபித்து வருகின்றார்கள்.

    இல்லாததை எண்ணி ஏங்காமல் இருப்பதை வைத்துக்கொண்டு பல சாதனைகளைச் செய்யத் தொடங்கியுள்ளார்கள்."

    என்கிறது இந்நூல்.

    இதனை எழுதியவர் கவிஞர் ஏகலைவன்.

    கவிஞர் ஏகலைவன் - விபத்தில் காலை இழந்தவர் - கவிஞர், கட்டுரையாளர், M.A தமிழ் படித்துக்கொண்டே இனிய நந்தவனம், உதவிக்கரம், தன்னம்பிக்கை, ஊன்றுகோல் போன்ற இதழ்களின் செய்தி சேகரிப்பாளரா உள்ளார். பல கவிதைப் போட்டிகளிலும் கட்டுரைப் போட்டிகளிலும் பங்கு பற்றி பரிசில்களைப் பெற்றுள்ளார். பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

    "பயண வழிப்பூக்கள்" என்னும் கவிதை நூலை எழுதியுள்ளார். ஊனமுற்றோரை மையப்படுத்தி வெளிவரும் "உதவிக்கரம்" மாத இதழில் பல ஊனமுற்றவர்களிடம் "பீனிக்ஸ் மனிதர்கள்" என்னும் தலைப்பில் பேட்டி கண்டு எழுதியவற்றை "சாதனை படைக்கும் உடல் ஊனமுற்றவர்கள்" என்னும் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

    வாய்ப்புகள் கிடைக்காமலேயே தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக பலரதும் பேட்டிகள் அமைந்துள்ளன. தங்களிடம் பரிதாபம் காட்டாமல் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு தாருங்கள் என்றவாறே அனைவரினதும் பொதுவான வேண்டுகோளாக உள்ளது.

    சாதனை படைக்கும் உடல் ஊனமுற்றவர்கள்

    ***புத்தகத்தில் இடம் பெற்ற சிலருடைய தகவல்கள் இங்கே சுருக்கமாக...***


    குட்டி - திரைப்படத்தில் நடித்தவர்.

    ஜனாப் ஷாஜகான் - பார்வையற்றவர் - B.A, M.A, B.Ed என்று மூன்று பட்டப்படிப்புகளை முடித்துவிட்டு, M.Phil இற்காக வைரமுத்துவின் பாடல்கள் மீதான ஆய்வினை மேற்கொண்டுள்ளார், கூடவே I.A.S தேர்விற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

    ரஜனிகாந் - பார்வையற்றவர் - சிறந்த நாவன்மை மிக்கவர், அரட்டை அரங்கம், வானமே எல்லை, அகடவிகடம் என்று பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றியுள்ளார்.

    ம.கணேசன் - இளம்பிள்ளைவாதத்தினால் பாதிக்கப்பட்டவர் - மாநில அளவிலான உடல் ஊனமுற்றோர் பிரிவில் ஆணழகன் போட்டியில் பங்கு பற்றி மிஸ்டர். தமிழ்நாடு பட்டத்தைப் பெற்றவர்.

    மா.மோகனசுந்தரம் - நடக்க முடியாதவர் - M.A ஆங்குல இலக்கிய பட்டதாரி. பல்கலைக் கழக முதல் மாணவனாக தேர்ச்சியடைந்து, 2003-2004 ஆண்டிற்கான சிறந்த மாணவனுக்கான தங்கப் பதக்கத்தை முன்னாள் ஆளுநர் திரு ராம்மோகன்ராவ் அவர்களிடம் பெற்றவர்.

    சுடரொளி லோகநாதன் - பூவிழுதல் என்னும் குறைபாட்டினால் கண்பார்வையை முற்றிலுமாக இழந்து, பார்வையற்றவர் பள்ளிகளில் படித்து, இலவச கண் சிகிச்சை முகாமில் வெளிநாட்டு மருத்துவர்களின் உதவியால் மீண்டும் பார்வை பெற்றவர்.
    தனக்குப் பார்வை கிடைத்த நிலையில், ஏனைய பார்வையற்றவர்களுக்காக "சுடரொளி பார்வையற்றோர் மையம்" என்னும் அமைப்பை நிறுவி தன் வாழ்வை அதற்காக அர்ப்பணித்து வாழ்பவர். இன்று இவரது சுடரொளி மையத்தில் 40 உள்ளார்கள்.
    பார்வையற்றோர் சுயமாக சம்பாதித்து வாழ்வதற்கு ஏதுவாக சாக்பீஸ் தயாரிப்பு, ஆபீஸ் கவர்கள் தயாரிப்பு, ஒயர் பின்னுதல் போன்ற தொழில்களைக் கற்றுக் கொடுத்து வருகிறார்.

    சரவணகுமார் - போலியோவினால் கால்கள் பாதிக்கப்பட்டவர் - சேலம் அரசு iti இல் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பட்டயப் பயிற்சியை முடித்தவர், DTP படித்துள்ளார், தற்சமயம் சிறு அளவிலான DTP வேலைகள்ச் செய்து கொடுக்கிறார்.

    முத்து - பார்வையற்றவர் - மேடைப்பாடகர், கோவை ரிதம்ஸ், ஜனரஞ்சனி, ராகப்பிரியா போன்ற இசைக் குழுக்களில் பாடகனாகப் பங்கேற்றுள்ளார். தற்போது கோவை இந்திய விமானப் படைப் பிரிவில் பணியாற்றுகிறார்.

    காட்டூர் சி.அருள்மொழி - போலியோவினால் கால்களையும் ஒரு கையையும் இளந்தவர் - வீட்டிலேய சிறு அளவிலான துணிக்கடையை நடத்தி வருகிறார், கவிஞர், காட்டூர் பகுதியில் உள்ள பிரச்சனைகள் பற்றி அக்கறையுள்ளவர். அதற்காக மனுச் செய்பவர்.

    ஜெ.தீபா - போலியோவினால் பாதிக்கப்பட்டவர் - இந்திய விளையாட்டுத்துறையின் உடல் ஊனமுற்றோர் பிரிவில் சர்வதேச தடகள வீராங்கனை, ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், பூப்பந்து போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுகிறார்.
    இதுவரையில் மூன்று சர்வதேசப் போட்டுகளில் பங்கு பற்றியுள்ளார். 21 தங்கம், 16 வெள்ளி, 8 வெண்கல்ப பதக்கங்களைப் பெற்றுள்ளார். பல அமைப்புகளிடம் இருந்து பல விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழகத்தின் ஒரே சர்வதேச விளையாட்டு வீராங்கனை.

    அன்பு - மின்சாரம் தாக்கியதில் பாதிக்கபபட்டவர், இரண்டு கைகளையும் இழந்தவர் - தற்சமயம் வேலைக்கு ஆட்களை வைத்து சுயமாக விளம்பர போர்டுகள் வரையும் தொழிலை செய்து வருகிறார்.

    திருக்குறள் அ.சீனிவாசன் - போலியோவினால் பாதிக்கப்பட்டவர் - பனை ஓலைகளைப் பதப்படுத்தி, அதில் திருக்குறள்களை எழுதியுள்ளார்.

    கோவை எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி - பிறவியிலேயே கை,கால்கள் இல்லாதவர் - பாடகர், இதுவரை 1500 இற்கும் அதிகமான கச்சேரிகளில் பங்கு பற்றியுள்ளார். அகில இந்தி வானொலி நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று A கிரேடு வித்துவான் பட்டத்தை பெற்றுள்ளார். கடந்த வருடம் கலை மாமணி விருதும் பெற்றுள்ளார்.

    மணிகண்டன் - இயந்திரத்தில் மாட்டுப்பட்டு கையை இழந்தவர் - கடைவீதியில் நடைபாதைக் கடை வைத்து விற்பனை செய்கிறார்.

    ஜனார்த்தனன் - மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி இரண்டு கைகளையும் ஒரு காலையும் இழந்தவர். - வாயினால் ஓவியம் வரையும் இவர் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றவர்

    ஜெயப்பிரியா - போலியோவினால் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டவர் - தனியார் ITI இல் ஒன்பதாண்டுகாலமாக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றுகிறார்.

    ஜனாப் ஷாதிக் பாஷா - போலியோவினால் வலது கால் பாதிக்கப்பட்டவர் - தனியார் வேலை வாய்ப்பகம் ஒன்றை ஆரம்பித்து பலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறார்.

    நாகராஜன் - பிறவியிலேயே கால்கள் வளர்ச்சி இல்லாதவர் - சுயமாக சைக்கிள் கடை வைத்துள்ளார்.

    பர்ணபாஸ் - போலியோவினால் பாதிக்கப்பட்டவர் - நூலகத்துறையில் B.Sc பட்டம், பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர், அரசுப் பணியாளனாக அம்மாப்பேட்டை கிளை நூலகத்தில் நூலகராக பணியாற்றுகிறார்.

    எஸ்.ஜெயக்குமார் - போலியோவினால் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டவர் - B.Pharm பட்டப் படிப்பு படித்து, கீழ்ப்பாக்கம் mots மருத்துவமனையில் மருந்தாளுநராகப் பணியாற்றுகிறார்.

    **********

    இப்புத்தகம் பற்றி ஏகலைவன் கூறும்போது, தமிழகத்தில் உள்ள ஒன்றரை இலட்சம் ஊனமுற்றோரில், சாதாரணமானவர்களால் செய்ய முடியாத பல காரியங்களைச் செய்து பல ஊனமுற்றவர்கள் விளங்குவதாகவும், இதில் வெளச்சம் பட்டவர்கள் மட்டுமே வெளியுலகிற்கு அறிமுகமாகியுள்ள நிலையில், வெளிச்சம் படாத பலர் தங்கள் ஊனத்தைப் போலவே சாதனைகளையும் கூட முடக்கிக்கொண்டு வீட்டிற்குள்ளேயே உள்ளார்கள், இவர்களை வெளிக் கொண்டு வர ஊக்கப்படுத்தும் முகமாகவே தான் இந்நூலை உருவாக்கியதாக குறிப்பிட்டார்.

    அவரை நாம் பாரட்டுகின்றோம்.

    மேலை நாடுகளில் உடல் ஊனமுற்றவர்களுக்கு பல விசேட சலுகைகள் உள்ளன, அரசு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களும் அவர்களுக்கு வேண்டிய வசதிகைச் செய்து தருகின்றன. அங்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை பெற்றவர்களுக்கும் சலுகைகள் கிடைக்கின்றன. உடல் ஊனமுற்றோர் அலுவலகங்களுக்கு சக்கர நாற்காலிகளில் தாமே வருவதற்குப் உதவியாக சாய்வான பாதைகள் உள்ளன. பல கல்லூரிகளில் உள்ள கேட்போர் கூடங்களில் நடைபெறும் கருத்தரங்கு அறைகளிலும் இவ் வசதி உண்டு.

    இலங்கையில் உள்ள Dialog என்னும் செல்லிடப்பேசி நிறுவனம் வாய் பேசாத - காது கேளாதவர்களுக்கு எண்ணற்ற இலவச குறுஞ் செய்திகளை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் ஏற்ப இலவச சேவையை வழங்குகிறது. இதேபோல் தமிழ் நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.

    தமிழ் நாட்டில் மட்டும் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான உடல் ஊனமுற்றவர்கள் உள்ள நிலையில், அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்து எதிர் வரும் 19.11.2006 அன்று சென்னையில் மாநாடும் பேரணியும் நடத்த உள்ளார்கள்.


    ந.சி.கந்தையாபிள்ளை

    2006-10-16 by விருபா - Viruba | 1 கருத்துகள்
    ந.சி.கந்தையாபிள்ளை

    அறிஞர் ந.சி.கந்தையா ஈழத்தின் தலைசிறந்த தமிழ்ப் பேரறிஞர், தமிழிலக்கிய துறையில் சிறப்பாக செயலாற்றியவர். மிகச் சிறந்த படைப்பாளி, பல துறைகளில் நூல்களை எழுதிய தமிழர். தமிழ் இலக்கியங்களை, எளிய பாமர மக்களும் படித்துப் பலன் பெறுமாறு உரைநடையில் வழங்கியது இவருடைய சிறப்பாகும். தமிழியம் பற்றிய ஆய்வை மேற்கொண்ட பல அறிஞர்களுள் ந.சி.கந்தையா அவர்களின் பணி முதன்மையானது. மற்றைய அறிஞர்களால் எட்டப்படாத பொது அறிவுத் துறையிலும், அகராதித் துறையிலும் தனித்துவமான இடத்தை பெற்றார். செந்தமிழ் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி, தமிழ்ப் புலவர் அகராதி, காலக்குறிப்பு அகராதி, திருக்குறள் அகராதி போன்ற அகராதிகள் இவரால் தோற்றம் பெற்றன.


    யாழ்பாணத்திற்கு அருகில் உள்ள கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டு நன்னியர் சின்னத்தம்பி அவர்களின் புதல்வராகப் பிறந்தார் ந.சி.கந்தையா. அவ்வூரிலேய கல்வி கற்றுத் தேறி, சில காலம் ஆசிரியப்பணி செய்தார். ஆசிரியப் பணியிலிருக்கும்போதே ஈழத்தில் பெரும் புலவர்களின் அறிமுகத்தில் தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார். பின்னர் மலேயாவில் பிருத்தானியா தொடர்வண்டி சேவையில் சில காலம் பணியாற்றினார். தாம் எழுதிய நூல்களை பதிப்பித்து வெளியிடுவதற்காக தமிழ் நாட்டிற்கு சென்று, அங்கு வீரபாகுப் பிள்ளை என்பவரால் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த ஒற்றுமை நிலையம் மூலமாக தனது நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகிய பதிப்பகங்களும் ந.சி.கந்தையா அவர்களுடைய நூல்களை வெளியிட்டன.

    இவர் தனது 74 வது வயதில் 1967 இல் இலங்கையில் காலமானார்.

    புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் தாம் எழுதிய “புகழ் மலர்கள்” என்னும் நூலில் தமிழறிஞர் ந.சி.கந்தையா அவர்களைப் பற்றி பின்வருமாறு பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்..

    ந.சி.கந்தை யாஎனும் நல்லவன், வல்லவன்
    தமிழ், தமி ழினவர லாறனைத் தையும்
    தொல்பொருள் ஆய்வின் தொகைவகை விரிந்து
    நிலநூல் கடநூல் சான்றுகள் நிறைத்தும்
    தமிழ்நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும்
    இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும்
    பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும்,
    வையம் வியக்க வரலா றெழுதினான்
    பொய்அகன் றுமெய்க் கைஉ யர்ந்து
    வாழ்க! ந.சி.கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!

    ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார்.
    • பத்துப்பாட்டு
    • பதிற்றுப்பத்து
    • கலித்தொகை
    • பரிபாடல்
    • அகநானூறு
    • புறப்பொருள் விளக்கம்
    • கலிங்கத்துப் பரணி
    • விறலிவிடுதூது
    • பெண்கள் உலகம்
    • பெண்கள் சமூகம் அன்றும் இன்றும்
    • பெண்கள் புரட்சி
    • பொது அறிவு
    • பொது அறிவு வினா விடை
    • உலக அறிவியல் நூல்
    • உங்களுக்குத் தெரியுமா
    • அறிவுக் கட்டுரைகள்
    • நூலகங்கள்
    • அறிவு மாலை
    • அறிவுரைக் கோவை
    • தமிழர் சமயம் எது?
    • சைவ சமய வரலாறு
    • சிவன்
    • இந்து சமய வரலாறு
    • தமிழர் பண்பாடு
    • நமது தாய்மொழி
    • நமது மொழி
    • நமது நாடு
    • திராவிட மொழிகளும் இந்தியும்
    • தமிழ்ப் பழமையும் புதுமையும்
    • முச்சங்கம்
    • தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் பாடலா?
    • ஆரியர் தமிழர் கலப்பு
    • ஆரியத்தால் விளைந்த கேடு
    • புரோகிதர் ஆட்சி
    • இராமாயணம் நடந்த கதையா?
    • ஆரியர் வேதங்கள்
    • திராவிடம் என்றால் என்ன?
    • திராவிட இந்தியா
    • திராவிட நாகரிகம்
    • மறைந்த நாகரிகம்
    • ஆதி மனிதன்
    • ஆதி உயிர்கள்
    • மனிதன் எப்படித் தோன்றினான்?
    • மரணத்தின் பின்
    • பாம்பு வணக்கம்
    • தமிழர் யார்?
    • உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு
    • சிந்துவெளித் தமிழர்
    • தென்னிந்நியக் குலங்களும் குடிகளும்
    • தமிழர் சரித்திரம்
    • வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட தமிழர்
    • திருவள்ளுவர்
    • திருக்குறள்
    • தமிழகம்
    • தமிழ் இந்தியா
    • திருக்குறள் அகராதி
    • தமிழ்ப் புலவர் அகராதி
    • தமிழ் இலக்கிய அகராதி
    • காலக்குறிப்பு அகராதி
    • செந்தமிழ் அகராதி
    • கலிவர் யாத்திரை
    • இராபின்சன் குரூசோ
    • அகத்தியர்
    • தமிழ் ஆராய்ச்சி
    • தமிழ் விளக்கம்
    • நீதிநெறி விளக்கம்


    சௌந்தர சுகன்

    2006-10-07 by விருபா - Viruba | 1 கருத்துகள்
    சௌந்தர சுகன்
    1997 ஜூனில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 19 ஆண்டுகளாக வெளிவரும் இதழ் "சௌந்தர சுகன்" ஆகும்.

    இதன் ஆசிரியராக சு.சௌந்தரவதனா உள்ளார்.


    முகம்

    2006-10-04 by விருபா - Viruba | 0 கருத்துகள்
    முகம்

    1983 ஆம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து வெளிவரும் இலக்கிய மாத இதழ "முகம்" ஆகும். இதழின் முப்பு அட்டையில் பல்வேறு சாதனையாளர்களை வெளியிட்டு அச்சாதனையாளர்களைப் பற்றிய வாழ்க்கைக்குறிப்புகளை வெளியிடப்படுகிறது. இதுவரையில் 213 சாதனையாளர்களைப் பற்றிய தகவல் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன் ஆசிரியர் மாமணி அவர்கள் பல விருதுகள்ப் பெற்றவர், "கிந்தனார் பதில்கள்" என்று இவர் பதில்கள் மக்கள் பாராட்டைப் பெற்றவை. "கிந்தனார் பதில்கள்" தொகுக்கப்பட்டு தனிப் புத்தகமாகவும் வெளிவந்துள்ளது.

    அண்மையில் முகம் மாமாணியாரின் பவழ விழா கொண்டாடப்பட்டது. அதில் பல்வேறு சாதனையாளர்கள், குறிப்பாக இளஞ் சாதனையாளர்கள் பாராட்டைப் பெற்றார்கள்.


    கே.பி.ஹரன்

    2006-09-29 by விருபா - Viruba | 3 கருத்துகள்
    கே.பி.ஹரன்

    இலங்கையின் தலைசிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவராகவும் நல்லதொரு சமயவாணராகவும் திகழ்ந்தவர் கே.பி.ஹரன். தனது 23வது வயது முதல் பத்திரிகைத்துறையில் பணியாற்றியவர். முதல் 10 ஆண்டுகள் சென்னையில் "தமிழ்நாடு", "ஸ்வராஜ்யா", "தாருல் இஸ்லாம்", "ஹனுமான்", "ஹிந்துஸ்தான்" ஆகிய பத்திரிகைகளிலும் பின்னர் "வீரகேசரியில்" (1939-1959) 20 ஆண்டுகள், "ஈழநாட்டில்" (1959-1979) 20 ஆண்டுகள் என்று தமிழ்ப் பத்திரிகை உலகில் 50 ஆண்டுகாலம் பணியாற்றியவர். இரு இதழ்களிலுமே அவர் பிரதம ஆசிரியராகப் பணியாற்றினார். வீரகேசரியில் "ஊர்க்குருவி" என்ற பெயரில் இவர் தினமும் எழுதிய கட்டுரைகள் தமிழ் மக்கள் பலராலும் பாராட்டப்பட்டவை. அதேபோன்று "ஈழநாடு" இதழில் "ஐயாறன்" என்ற பெயரில் எழுதியவையும் சிறப்பானவை. சில நேரங்களில் "கே.பி.எச்" என்ற பெயரிலும் எழுதியுள்ளார்.

    1906.10.17 இல் தஞ்சைமாவட்டம் திருவையாற்றில் பிறந்த இவருடைய இயற்பெயர் கிருஷ்ணசுவாமி பிராணதார்த்தி ஹரன் என்பதாகும்.

    1959 இல் யாழ்ப்பாணத்தில் கே.சி.தங்கராசா மற்றும் டாக்டர் சண்முகரத்தினம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட "ஈழநாடு" இதழின் முதலாவது பிரதம ஆசிரியர் இவரேயாவார்.

    1979 இல் சென்னை திரும்பிய அவர் தனது 75 ஆவது வயதில் 1981.10.14 அன்று சென்னை மயிலாப்பூரில் காலமானார்.

    "சுயநலப் பற்றற்று நாட்டிற்கு நற்பணிபுரியும் பரந்த மனப்பான்மையுடன் பத்திரிகையாளன் செயற்படும்போதுதான் பத்திரிகைகள் நாட்டுக்கு பயனுள்ள சேவை செய்ய முடியும்" என்ற மகாத்மா காந்தியின் வரைவிலக்கணத்தை தாரக மந்திரமாகக் கொண்டு ஐம்பது ஆண்டுகள் நற்பணியாற்றியவர் கே.பி.ஹரன்.

    இனிது நீடூழி வாழியவே என்ற தலைப்பில் கி.வா.ஜகந்நாதன் அவர்கள் ஈழநாடு பத்திரிகையின் பத்தாண்டு நிறைவையொட்டி எழுதிய வாழ்த்துச் செய்தி.

    இலங்கையில் தமிழர் இலங்குறும் வளஞ்சார்
    யாழ்ப்பாண நன்னகர்க் கண்ணே
    துலங்குறும் ஈழ நாடெனும் பெயரைச்
    சூடியே நாளித ழாக
    நலங்கொள்ச் செய்தி விரித்தறி வினையே
    நயம்பெற விளங்குகட் டுரைகள்
    கலங்களு ரொழிக்கும் சமயத்தின் விளக்கம்
    காட்டியே மலர்வதொன் றுண்டால்

    பன்னெடுங் காலம் நாளிதழ் சமைக்கும்
    பணியினில் அணிபெற ஓங்கி
    நன்னய முறவே தலையங்கம் சமய
    நலஞ்சொலும் கட்டுரை யாதி
    இன்னிய லுடனே எழுதுதல் வல்லார்
    இயற்பெயர் அரனெனும் பெரியார்
    மன்னிய நல்லா சிரியரென் றமைந்து
    வளர்வதிந் நாளிதழ் இனிதே!

    இத்தகு பெயர்கொள் ஈழநா டிப்போ
    திலகிய பத்தாண்டு நிரம்பி
    வித்தக முடனே தமிழர்கள் போற்ற
    விளங்கியே நலம்செய்து வளரும்
    சத்தியங் கரந்தான் முருகவேள் அருளால்
    தாரணி யிற்புகழ் பெருக்கி
    எத்திசை யினரும் போற்றமே லோங்கி
    இனிது நீ டூழிவா ழியவே


    தமிழ் மாருதம்

    2006-09-28 by விருபா - Viruba | 0 கருத்துகள்
    தமிழ் மாருதம்

    செந்தமிழ்ச்செல்வர் தமிழாகரர் டாக்டர் ச.சாம்பசிவனார் அவர்களால் மதுரையிலிருந்து வெளியிடப்படும் இதழ் "தமிழ் மாருதம்" ஆகும்


    உங்கள் நூலகம்

    2006-09-26 by விருபா - Viruba | 0 கருத்துகள்
    உங்கள் நூலகம்

    NCBH என்று சுருக்கமாக அறியப்படும் புது யுக புத்தகப் பண்ணையின் வாசகர் அமைப்பான "நியூ செஞ்சுரி வாசகர் சங்கம்" வெளியிடும் இதழ் உங்கள் நூலகம் ஆகும்.

    "கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு" என்ற வாசகத்துடன் தமிழில் வெளியாகும் நூல்கள் ப்றறிய விமர்சனங்களையும், பதிப்புத் தொழில் தொடர்பான பல விடயங்களையும் தாங்கி இவ்விதழ் இரண்டு மாதங்களுக்கொருமுறை மலர்கிறது.

    இதன் ஆசிரியராக ஆர்.பாத்தசாரதி உள்ளார்.


    **********************************

    எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ள புத்தகங்களில்,
    • அதிக மதிப்புரைகளைப் பெற்ற புத்தகங்கள்,
    • அதிக புத்தகங்களை வெளியிட்ட பதிப்பகம்,
    • அதிக புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்,
    • புதிதாக இணைக்கப்பட்ட எழுத்தாளர்,
    • புதிதாக இணைக்கப்பட்ட பதிப்பகம்
    • அதிக புத்தகங்களைக் கொண்ட புத்தகப்பிரிவு

    போன்ற தகவல்களை நிலவரம் என்னும் பக்கத்தில் பெற்றுக்கொள்ளலாம்.


    தமிழ்ப்பணி

    2006-09-20 by விருபா - Viruba | 1 கருத்துகள்
    தமிழ்ப்பணி


    பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களால் ஆரம்பிக்ப்பட்டு, தற்சமயம் அவருடைய மகன் வா.மு.சே.திருவள்ளுவர் அவர்களால் நடத்தப்படும் இதழ் தமிழ்ப்பணி


    ***************************

    எமது தளத்தில் இதுவரையில், 380 தமிழ் எழுத்தாளர்கள் 69 பிரிவுகளில் எழுதியுள்ள 672 தமிழ்ப் புத்தகங்களின் தகவல்கள், வெளியான ஆண்டுகளின் வரிசையில் இணைக்கப்பட்டுள்ளன.

    37 சிற்றிதழ்கள் பற்றிய தகவல்களையும் இணைத்துள்ளோம்.


    மகாகவி

    2006-09-19 by விருபா - Viruba | 0 கருத்துகள்
    மகாகவி

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டிலிருந்து வெளிவரும் இதழ் "மகாகவி" ஆகும்.

    இதன் ஆசிரியர் ; வதில்லைபிரபா


    ***********

    எமது தமிழ்ப்புத்தக தகவல் திரட்டு தளத்தில் இதுவரையில், 379 தமிழ் எழுத்தாளர்கள் 68 பிரிவுகளில் எழுதியுள்ள 667 தமிழ்ப் புத்தகங்களின் தகவல்கள், வெளியான ஆண்டுகளின் வரிசையில் இணைக்கப்பட்டுள்ளன.


    பன்முகம்

    2006-09-14 by விருபா - Viruba | 0 கருத்துகள்
    பன்முகம்

    பின்நவீனத்துவம் பற்றி பல நூல்களை எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு, புதுப்புனல் வெளியீடாக, காலாண்டிதழாக வெளிவரும் கலை இலக்கியக் கோட்பாட்டு இதழ் பன்முகம் ஆகும்.


    ***********

    எமது தமிழ்ப்புத்தக தகவல் திரட்டு தளத்தில் இதுவரையில், 376 தமிழ் எழுத்தாளர்கள் 66 பிரிவுகளில் எழுதியுள்ள 660 தமிழ்ப் புத்தகங்களின் தகவல்கள், வெளியான ஆண்டுகளின் வரிசையில் இணைக்கப்பட்டுள்ளன.


    புதிய புத்தகம் பேசுது

    2006-09-11 by விருபா - Viruba | 1 கருத்துகள்
    தமிழில் வெளிவரும் புதிய புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்து முகமாக அப்புத்தகங்கள் பற்றிய ஆய்வாளர்களின் விமர்சனங்கள், மற்றும் பதிப்புத் தொழில் பற்றிய பல தகவல்களைத் தாங்கி வெளிவரும் இதழ் புதிய புத்தகம் பேசுது. தமிழ் எழுத்தாளர்களின் நேர்காணல்கள், கட்டுரைகள், ஆய்வுகள் பலவும் இவ்விதழின் சிறப்பாகும்.

    பல தமிழ்ப் பதிப்பகங்களின் விளம்பரங்களுடன் புதிய புத்தகங்கள் பற்றிய தகவல்கள்களும் உள்ளன.பல புதிய புத்தகங்கள் பற்றிய தகவல்களை அச்சில் பெற விரும்பும் வாசகர்களுக்கு இவ்விதழ் ஒரு அரிய வரவாகும்.

    பல்வேறு இடையூறுகளிற்கு மத்தியில் இவ்விதழிற்காக சிறப்பாக பணியாற்றும் இதன் ஆசிரியர் க.நாகராஜன் அவர்களையும் ஆசிரியர் குழுவினரையும் எமது தளத்தின் சார்பாக பாராட்டுகின்றோம்.

    இவ்விதழ் பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாகும்.


    புதிய காற்று

    2006-09-08 by விருபா - Viruba | 0 கருத்துகள்
    புதிய காற்று


    தமிழுலகிற்கொரு புதிய அனுபவமாக, மதுரையிலிருந்து வெளிவரும் இதழ் புதிய காற்று.
    இதன் ஆசிரியராக ஹமீம் முஸ்தபா உள்ளார்.



    எமது தமிழ்ப்புத்தக தகவல் திரட்டு தளத்தில் இதுவரையில், 375 தமிழ் எழுத்தாளர்களின் 659 தமிழ்ப் புத்தகங்களையும், 33 சிற்றிதழ்களையும் இணைத்துள்ளோம்.


    தேசிய வலிமை

    2006-09-06 by விருபா - Viruba | 0 கருத்துகள்
    தேசிய வலிமை


    வீடுவாழ நாட்டை வாழ வை என்ற குறிக்கோளுடன் மதுரையிலிருந்து வெளிவரும் இதழ் தேசிய வலிமை ஆகும். இதன் ஆசிரியராக கவிஞர் சுரா.சாமிநத்தம் உள்ளார்

    ************************************

    எமது தமிழ்ப்புத்தக தகவல் திரட்டு தளத்தில் இதுவரை 652 தமிழ்ப் புத்தகங்களையும், 32 சிற்றிதழ்களின் 105 வெளியீடுகளையும் இணைத்துள்ளோம்.


    இலக்கியப்பீடம்

    2006-09-05 by விருபா - Viruba | 0 கருத்துகள்


    மூத்த எழுத்தாளர் கலைமாமணி விக்கிரமன் அவர்கள் ஆசிரியராக இருந்து வெளிவரும் இதழ் இலக்கியப்பீடம் ஆகும்


    இன்று உலக வலைப்பதிவுகள் தினம்

    2006-08-31 by விருபா - Viruba | 0 கருத்துகள்
    இன்று உலக வலைப்பதிவுகள் தினம், அனைத்து தமிழ் வலைப்பதிவாளர்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்.

    வலைப்பதிவாளர் தினத்தின் சிறப்பாக 5 வலைப்பதிவுகள் அறிமுகப்படுத்தல் வேண்டும்.

    1.http://www.venkatarangan.com/blog/default.aspx

    2.http://www.fotothing.com/maiylah

    3.http://laktek.blogspot.com

    4.http://mazhalaitalk.blogspot.com

    5.http://www.sailblogs.com

    கடந்த வருடம் வலைப்பதிவாளர்கள் தினத்தைப்பற்றி பதிவு இட்ட மதி கந்தசாமி அவர்களுக்கு, எமது wordpress வலைப்பதிவின் template ஐ மேம்படுத்தி தந்தமைக்காக இன்று நன்றி கூற விரும்புகிறோம்.


    ஆயிரமாயிரம் ஆண்டுகள்

    2006-08-27 by விருபா - Viruba | 0 கருத்துகள்
    கலைமகள், கணையாழி, வீரகேசரி போன்ற இதழ்களில் பிரசுரமான, பரிசு பெற்ற செங்கை ஆழியானின் பத்துக் குறுநாவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு "ஆயிரமாயிரம் ஆண்டுகள்" என்ற தலைப்பில் புதிய புத்தகமாக, எஸ்.பொ அவர்களின் மித்ர வெளியீடாக வருகிற வெள்ளிக்கிழமை (01.09.2006) அன்று, சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டிடத்தில் உள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் வெளியிடப்படவுள்ளது.

    அமுதசுரபி இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் இதன் முதற்பிரதியை கவிஞர் த.பழமலய் அவர்கள் வெளியிட, கிழக்குப் பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.

    இந்நிகழ்வில்,

    சித்தன்
    யாழூர் துரை
    எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
    முனைவர் பத்மாவதி விவேகானந்தன்
    முனைவர் பா.ரவிக்குமார்
    "புதிய பார்வை" இணையாசிரியர் மணா
    கவிஞர் வைகைச் செல்வி
    "நிழல்" ஆசிரியர் ப.திருநாவுக்கரசு
    ஜெ.முனுசாமி
    பொன்.இந்ர

    ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள்.

    ஒரு பதிப்பாளரின் புத்தக வெளியீட்டுவிழாவிற்கு இன்னொரு பதிப்பாளர் அழைக்கப்படுவதும், அதற்கு மற்றைய பதிப்பாளர் உடன்பட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பிப்பதுமான, ஒரு ஆரோக்கியமான விடயத்தை தொடக்கிவைத்த இரு பதிப்பாளர்களையும் நாம் பாராட்டுகிறோம்.

    இவ் விழாவிற்கு இன்னமும் நான்கு நாட்களே உள்ள நிலையில், போர் மேகங்கள் சூழ்ந்த யாழ் மண்ணில் இருந்து விழாவின் நாயகனாக செங்கை ஆழியான் சென்னை வந்து விழாவில் கலந்துகொள்வாரா என்பது சந்தேகமாகவே உள்ளது.


    தொடர்புடைய சுட்டிகள் :
    http://viruba.blogspot.com/2006/07/blog-post_20.html
    http://www.viruba.com/newreleasesfullview.aspx?id=58


    நாளை விடியும் ; பொதிகை மின்னல்

    2006-08-25 by விருபா - Viruba | 0 கருத்துகள்
    நாளை விடியும்

    திருச்சிராப்பள்ளியில் இருந்து வெளிவரும் இதழ் "நாளை விடியும்". இவ்விதழ் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளிவருகிறது. இதன் ஆசிரியர் பி.இரெ.அரசெழிலன் ஆவார்.

    பொதிகை மின்னல்

    தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் இருந்து வெளிவரும் இதழ் "பொதிகை மின்னல்" இவ்விதழ் பல துணுக்கு செய்திகளைத் தாங்கி வெளிவருகிறது. இதன் ஆசிரியராக வசீகரன் உள்ளார்.


    தமிழில் இணைய முகவரி

    2006-08-21 by விருபா - Viruba | 1 கருத்துகள்
    தமிழில் இணைய முகவரி
    எமது தமிழ்ப் புத்தக தகவல் திரட்டு www.viruba.com என்ற ஆங்கில இணைய முகவரியில் இயங்கிவருவது அனைவருக்கும் தெரிந்ததே.

    தற்சமயம் முற்றுமுழுதாக எந்த ஒரு தளத்தையும் ஆங்கிலம் தவிர்ந்த மொழியில் இணைய முகவரியை அமைத்துக்கொள்ள ICANN அனுமதியை தராத நிலையில், இதுவரைக்கும் அனுமதிக்கப்பட்ட பாதி தமிழிலும் பாதி ஆங்கிலத்திலும் அமைந்த இணைய முகவரியை நாம் விருபா.comபதிவு செய்துள்ளோம்.

    இன்று முதல் அப்புதிய இணைய முகவரியிலும் எமது தளம் இயங்கும் என்ற தகவலை வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்க கொள்கிறோம்.

    முன்னர் திசைகள் இன் திசைகள்.வணி மற்றும் பாரதி.அமை என்று சில இணைய தளங்கள் தமிழ் இணைய முகவரியுடன் இயங்கியதாக சொல்கிறார்கள், இதனைப்பற்றி தெரிந்தவர்கள் விபரம் கூறினால் உதவியாக இருக்கும்.

    இணையம்

    பிராமின் டுடே

    2006-08-19 by விருபா - Viruba | 0 கருத்துகள்


    சென்னையில்லிருந்து வெளிவரும் சிற்றிதழ் பிராமின் டுடே, இதன் ஆசிரியராக வாசன் உள்ளார்.


    கதை சொல்லி

    2006-08-08 by விருபா - Viruba | 0 கருத்துகள்
    கதை சொல்லி

    கரிசல் இலக்கியத்தின் பிதாமகனும், இன்றைய மூத்த எழுத்தாளருமான கி.ராஜநாராயணன் அவர்களால் கதை சொல்லி 1996 இல் ஆரம்பிக்கப்பட்டது.

    கரிசல் மண்ணில் நான்கு மாதப் பயிரிற்கு கந்தாயப் பயிர் என்று வழங்கப்படுவதைப் போல் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வெளிவரும் கதைசொல்லி ஒரு கந்தாய இதழ் ஆகும்.கிராமியப் பரப்பிற்கு எடுத்துச் செல்லும் அரிய இதழாக இது விழங்குகிறது.

    கி.ராஜநாராயணன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கழனியூரான் பொறுப்பாசிரியராக இருந்து இவ்விதழ் வெளிவருகிறது.

    இந்த இதழிற்கு மூத்த இலக்கிய கர்த்தாவான தி.க.சி, ஆய்வாளர் வல்லிக்கணண்ணன், பேராசிரியர் க.பஞ்சாங்கம், இரசிகமணி டி.கே.சி இன் பேரன் தீப.நடராசன், வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன், சுப.கோ.நாராயணசாமி, ஜெயபாரதன், கிருஷி போன்றோருடைய ஆலோசனைகளிலும், பங்களிப்பிலும் இவ்விதழ் மிளிர்கிறது.


    சிற்றிதழ் - பயில் நிலம்

    2006-08-05 by விருபா - Viruba | 0 கருத்துகள்
    பயில் நிலம்
    பொ.கோபிநாத் அவர்களின் தலமையில் பல இளம் படைப்பாளர்களின் துணையுடன் கொழும்பில் இருந்து வெளிவரும் இதழ் பயில் நிலம்


    உங்கள் பாரதி, கலை, மனிதநேயம்

    2006-08-04 by விருபா - Viruba | 0 கருத்துகள்
    உங்கள் பாரதி


    புதுவையில் இருந்து வெளிவரும் காலாண்டிதழ் உங்கள் பாரதி.
    இதன் ஆசிரியராக பாரதிவாணர் சிவா உள்ளார்.




    அம்பத்தூரில் இருந்து வெளிவரும் மாத இதழ் கலை.
    இதன் ஆசிரியர் - மணிமுடி.




    மதுரையிலிருந்து பேராசிரியர் ஏ.எம்.ஜேம்ஸ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் உடல், உள்ள, ஆன்மநல மாத இதழ் மனிதநேயம் ஆகும்.


    புது தில்லியிலிருந்து வெளிவரும் இதழ் வடக்குவாசல்

    2006-07-20 by விருபா - Viruba | 0 கருத்துகள்
    வடக்கு வாசல்எளிமை - தெளிவு - உறுதி என்பவற்றை தாரக மந்திரமாகக்கொண்டு, இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு என்ற வாசகங்களுடன் புது தில்லியிலிருந்து வெளிவரும் இதழ் வடக்குவாசல் ஆகும்.

    புது தில்லி தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த பி.ஏ.கிருஷ்ணன், இரா.முகுந்தன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி போன்றோருடைய பேராதரவுடன் இவ்விதழ் வெளி வருவது குறிப்பிடத்தக்கது.

    அண்மையில் வடக்குவாசல் பதிப்பகம் மூலம் எஸ்.ஷங்கரநாராயணன் அவர்கள் தொகுத்த ஜுகல்பந்தி என்ற புத்தகத்தை வெளியிட்டதன்மூலம் பதிப்பகத் துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்கள்.

    இவ்விதழின் ஆசிரியராக யதார்த்தா கி.பென்னேஸ்வரன் உள்ளார்.


    செங்கை ஆழியானின் புதிய புத்தகம்

    by விருபா - Viruba | 0 கருத்துகள்
    செங்கை ஆழியானின் ஆயிரமாயிரம் ஆண்டுகள்



    செங்கை ஆழியானின் பத்துக் குறுநாவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு "ஆயிரமாயிரம் ஆண்டுகள்" என்ற தலைப்பில் புதிய புத்தகமாக இந்த விரைவில் வெளிரவுள்ளது.

    இதில் இடம் பெறும் குறுநாவல்கள், செங்கை ஆழியான்

    "பழைய வானத்தின் கீழே"
    "முதல் தவறு"
    "ஒரு பௌர்ணமிக்காலம்"
    "நிலமகளைத் தேடி..."
    "யொகாறா"
    "அக்கினிக் குஞ்சு"
    "சாம்பவி" (கணையாழி)
    "யாழ்ப்பாணக் கிராமம் ஒன்று" (கணையாழி)
    "மீண்டும் ஒரு சீதை" (கலைமகள்)
    "வரமும் தவமும்"


    சிற்றிதழ் தாமரை

    2006-07-18 by விருபா - Viruba | 1 கருத்துகள்
    தாமரை



    சென்னை தியாகராய நகரில் இருந்து வெளிவரும் இதழ் தாமரை.

    தற்சமயம் சி.மகேந்திரன் அவர்கள் இதன் ஆசிரியராக உள்ளார்.

    இவ்விதழ் 1957 இல் ப.ஜீவானந்தம் அவர்களால் ஆரம்பிக்ப்பட்டது.


    இரண்டு சிற்றிதழ்கள்

    2006-07-17 by விருபா - Viruba | 0 கருத்துகள்
    ஏழைதாசன்




    புதுக்கோட்டையிலிருந்து வெளிவரும் மாத இதழ் ஏழைதாசன்

    இதன் ஆசிரியர் : எஸ்.விஜயகுமார்




    முங்காரி



    கோவை கருமலை செட்டிப்பாளையத்திலிருந்து வெளிவரும் மாத இதழ் முங்காரி

    இதன் ஆசிரியர் : குன்றம் மு.இராமரத்நம்


    Australia வில் வெளிவரும் தமிழ் இதழ் கலப்பை

    2006-07-15 by விருபா - Viruba | 0 கருத்துகள்
    கலப்பை
    "மனித மனதை உழுகின்ற கலப்பை உலகத் தமிழர்தம் உணர்வை உயர்த்தி நிற்கும்" என்ற வாசகத்துடன் Australia வின் Sydny நகரில் இருந்து வெளிவரும் இதழ் கலப்பை.

    இது ஒரு காலாண்டிதழ் ஆகும்.

    இவ்விதழ் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவருகிறது.


    இரு சிற்றிதழ்கள்

    2006-07-10 by விருபா - Viruba | 0 கருத்துகள்
    கங்கா காவேரி




    சென்னை பெரம்பூரிலிருந்து வெளிவரும் பல்சுவை மாத இதழ் கங்கா காவேரி.

    இதன் ஆசிரியர் A.ராஜாராம்









    பிரபஞ்ச அமைதி சேவா ஆஸ்ரமம்


    பெரம்பூரிலிருந்து வெளிவரும் ஆன்மீக மாத இதழ் பிரபஞ்ச அமைதி சேவா ஆஸ்ரமம் ஆகும்.

    சித்தர்கள், மகான்கள், ஞானிகள் கருத்துக்களை வெளியிடும் இதழாக இது உள்ளது.

    இதன் ஆசிரியர்
    யோகி வடிவானந்தா


    இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

    சிறப்புடைய இடுகை

    பேர்சிவல் பாதிரியாரால் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பழமொழிகள் (Tamil Proverbs Compiled by Rev. Peter Percival)

    வலைப்பதிவு காப்பகம்

    லேபிள்கள்

    • #iatr (2)
    • 2008 புத்தகத்திருவிழா (23)
    • 2009 புத்தகத்திருவிழா (5)
    • 2010 Chennai Book Fair (2)
    • 2011 Chennai Book Fair (1)
    • அகரவரிசை (1)
    • அகராதி (5)
    • அகிலன்.த (1)
    • அரசுடமை (1)
    • அறிமுகம் (8)
    • அறிவியல் புனைவு (1)
    • இணையம் (9)
    • ஈழத்து இலக்கியம் (2)
    • ஈழம் (5)
    • எ-கலப்பை (1)
    • எழுத்தாளர் (3)
    • எஸ்.பொ (2)
    • எஸ்.பொன்னுத்துரை (2)
    • கண்காட்சி (23)
    • கணிச்சுவடி (1)
    • காந்திஜி (1)
    • கால்டுவெல் (1)
    • சாகித்ய அகாதமி (1)
    • சிற்றிதழ் (16)
    • சுஜாதா (1)
    • சென்னையின் ஆரம்பகாலப் பதிப்புகள் (1)
    • சொல்லாய்வு (1)
    • தமிழ் (1)
    • தமிழ் இணையம் (2)
    • தமிழ்99 (1)
    • தமிழக அரசின் பரிசு (4)
    • தரவுதளம் (1)
    • தாய்மொழி (1)
    • திருத்தம் (1)
    • து.உருத்திரமூர்த்தி (1)
    • தொல்தமிழ் (1)
    • நெடுங்கணக்கு (1)
    • நெய்வேலி (1)
    • பட்டறை (2)
    • படங்காட்டல் (1)
    • பவள விழா (1)
    • பழமொழிகள் (1)
    • புத்தக வரலாறு (1)
    • புத்தகம் (4)
    • புதிய இதழ் (1)
    • புதிய புத்தகம் (24)
    • பேர்சிவல் (1)
    • பொருள் நூறு (1)
    • போட்டி (2)
    • போட்டிக்கு (1)
    • மலாயா இடப்பயர்வு (2)
    • மறுப்பு (1)
    • மஹாகவி (1)
    • மானிப்பாய் அகராதி (1)
    • முன்வெளியீடு (1)
    • யாழ்ப்பாண அகராதி (1)
    • வலைப்பதிவுலகம் (1)
    • விருது (1)
    • விருபா (1)
    • வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம் (1)
    • A History of Tamil Dictionaries (1)
    • BlogDay2008 (1)
    • Caldwell (1)
    • Chennai Book Fair 2010 (2)
    • Colporul (1)
    • DRAVIDIAN (1)
    • Gregory James (2)
    • Jaffna Library (1)
    • Rev. Peter Percival (1)
    • V.S.Thurairajah (1)

    Total Pageviews

    Copyright © 2010 விருபா Wordpress Theme Blogger Template Credits For