விருபா

தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு

RSS
  • Home
  • About
  • Contact

எஸ்.பொன்னுத்துரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எஸ்.பொன்னுத்துரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எஸ்.பொ 75 - மாயினி - யுகமாயினி

2007-09-26 by விருபா - Viruba | 8 கருத்துகள்
எஸ்.பொன்னுத்துரை
ஈழ எழுத்தாளர் எஸ்.பொ அவர்களின் பவள விழா நிகழ்வாக 30.09.2007 அன்று சென்னை மயிலையில் இலக்கிய நிகழ்வும் புத்தக வெளியீட்டரங்கமும் ஏற்பாடு செய்யப்படுள்ளது. காலை 10:00 மணி முதல் இலக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர் பாபு பரத்வாஜ் சிறப்பு முன்னிலை வகிக்க, பல தமிழ் இலக்கிய ஆளுமைகள் பங்கேற்கும் இந் நிகழ்வின் நிகழ்ச்சி நிரலை இங்கு பார்வையிடலாம்.
அழைப்பிதழ்

நிகழ்ச்சி நிரல்

விழாவின் இறுதி அங்கமாக எஸ்.பொ அவர்களை நிறுவக ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் 'யுகமாயினி' என்னும் தமிழ் இலக்கிய மாத இதழும், 'எஸ்.பொ' வின் புதிய நூல்கள் மூன்றும் வெளியிடப்படவுள்ளன.

"முரண்பாடுகள் மத்தியில் ஒருத்துவம், கலகத்தில் மலரும் சுதந்திரம்" என்ற வாசகத்தை மையப் பொருளாகக் கொண்டு 'யுகமாயினி' இதழ் வெளிவரும். சித்தன் இதன் பொறுப்பாசிரியராக உள்ளார். இதழ் வெளியீட்டிற்கு முன்னோடியாக, வெளிவரும் இதழ் எந்தத் தாளுடன், தன்மையுடன் வெளிவருமோ அதே போன்ற தன்மையுடன் 50 மாதிரி இதழ்கள், முதல் இதழின் உள்ளடக்கங்களுடன் அச்சிடப்பட்டு, இலக்கிய தொடர்புடையோர் பலரிடம் கருத்துக்களும் பெறப்பட்டுள்ளன.

மாதிரி இதழ்

"பெருவணிகப் பத்திரிகைகள் மிக வேகமாக இலக்கியத்தை அற்ப நுகர்பொருளாக மாற்றி விட்டன. மொழியும், படைப்பு வீறும் விதையடிக்கப்படுகின்றன. புதிய படைப்புக்களுக்கும் பிரசுர களங்கள் அருகிவிட்டன. தரமான இலக்கியத்தை முன்னெடுப்பதாகப் பரப்புரை செய்யும் சிறு பத்திரிகைகள், குழுநலம் பேணி சுய அரசியலில் முடங்கிக் கிடக்கின்றன. தமிழ்க் கலை - இலக்கிய நிகழ்வுகள் உலகளாவியதாக விசாலித்துள்ள நிலையில், அவை பற்றிய பதிவுகள் தமிழ்ச் சுவைப்புக்கும் அக்கறைக்கும் கிடைப்பதில்லை.
இலக்கியம் பற்றிய உண்மையின் தேடலாக அமையும் சிந்தனைகளையும், விவாதங்களையும், விமர்சனங்களையும் முன்னெடுக்கும் முனைப்புகள் மறைந்து வருகின்றன. உலகளாவியதாக விரிந்துள்ள தமிழ்ப் படைப்புகளுக்கு பிரசுர களமாக புத்தாயிரத்தின் பொற்பதங்களை உள்வாங்கி, கலை-இலக்கியம் சம்பந்தமான குழுசாராத, ஆரோக்கியமான, நேர்மையான எழுத்துச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு நடுப் பத்திரிகையாக, உலகளாவிய தமிழ் கலை-இலக்கிய நிகழ்வுகளின் வரலாற்று ஆவணமாக ஒரு பத்திரிகை வெளிவருதல் அவசியம் என உணரப்படுகின்றது.

முரண்பாடுகள் மத்தியில் ஒருத்துவம், கலகத்தில் மலரும் சுதந்திரம் கருத்துத் திணிப்பு அல்ல - கருத்துப் பகிர்தல்.
இலக்கியப் படைப்பின் பரப்பையும் சுவைப்பையும் அகலித்தல்.

இவற்றைத் தமிழ் செய்ய யுகமாயினி தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்.
"

என்கிறார் முதல் இதழில் இதன் நிறுவக ஆசிரியர் எஸ்.பொ.


யுகமாயினி ஆசிரியர் குழு.

ஜெயந்தி சங்கர் - சிங்கப்பூர்
நிலா - லண்டன்
மதிஅழகன் - டொரண்டோ
ரெ.கார்த்திகேசு - மலேசியா
ராஜ்ஜா - புதுச்சேரி
தமிழச்சி - சென்னை
பாலு தென்னவன் - சென்னை
பழமலய் - விழுப்புரம்
கழனியூரான் - திருநெல்வேலி
கம்பீரன் - திருச்சி

யுகமாயினி ஆலோசனைக் குழு
இந்திரா பார்த்தசாரதி
இன்குலாப்
சிற்பி
வா.மூர்த்தி
தர்மகுலசிங்கம் (டென்மார்க்)
வி.கே.டி.பாலன்

புதிய நூல்கள் பற்றிய பதிப்பாளரின் அறிமுகக் குறிப்புகள்.

1. மாயினி
மாயினி
தமிழில் முதல் அரசியல் நாவல்.

இலங்கை அரசியலில் பிரதான பாத்திரம் வகித்த தமிழ், சிங்கள அரசியல் தலைவர்கள் அனைவரும் இந்நாவலில் நடமாடுகிறார்கள்.1996 இல் ஜனாதிபதி சந்திரிகா காலத்தில் நடைபெற்ற வன்னிப் புலப்பெயர்வை இந்நாவல் பிரதான களமாகக் கொண்டுள்ளது. விந்தையான சித்த வைத்திய சூரணம் ஒன்றின் மூலம் சென்ற காலத்தினூடாக பயணிப்பதாக கற்பனை செய்யப்பட்டுள்ளது. மூன்று நூற்றாண்டுகளை அடக்கிய பண்டார நாயக்கா குடும்ப வரலாறு அரிய பல தகவல்களுடன் இந்நாவலில் சொல்லப்பட்டுள்ளது.

தமிழ்த் தலைவர்கள் தமிழ்த் தேசியத்தைப் பற்றி நினைக்கவில்லை என்றும், அடுத்தடுத்து சிங்கள அரசியல் வாதிகள் மேற்கொண்ட தமிழினத் துடைப்புச் சட்டங்களின் எதிர்வினையாகவே தமிழர் தேசியம் தோன்றியது என்றும், இந்நாவல் கூறுகிறது. அரசியல்வாதிகள் சிலருடைய அந்தரங்க வாழ்கையின் நிகழ்வுகள் பல துடிச்சலுடன் இதில் கையாளப்பட்டுள்ளது. தமிழர் தேசியத்தை முன்னெடுக்கும் உணர்வாளர்களுக்கும், உபாசகர்களுக்கும், ஊழியர்களுக்கும் இந்நூல் சமர்ப்பணமாகியுள்ளது.

தீ என்ற தனது முதலாவது நாவல் மூலம் இலக்கிய உலகில் சலசலப்பு ஏற்படுத்திய எஸ்.பொ, மாயினி மூலம் ஒரு பூகம்பத்தையே ஏற்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது. உதாரணமாக ஸ்ரீமாவோவிற்கும் மகன் அனுரவிற்கும் நடை பெறும் உரையாடலைச் சொல்லலாம் 'நீ என் மகன் ஆனால் பண்டார நாயக்காவின் மகன்தானா என்பதை அறுதியிட்டுச் சொல்லதுடியாது'. இந்திய அமைதி காக்கும் படை ஈழத்தில் நிலை கொண்டிருந்த பொழுது நடைபெற்ற நிகழ்வுகள் பல இந்நாவலிலே நுட்பமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

2.மணிமகுடம்
மணிமகுடம்
இலங்கைத் தீவின் கரையோர மாகாணங்கள் அந்நியர் ஆட்சிக்கு உட்பட்ட பின்னரும் 300 ஆண்டுகள் சுதந்திரத்தை காப்பாற்றிய வீர வரலாறு கொண்டது கண்டி நாடு. இக் கண்டி நாட்டின் சுதந்திரத்தை பாதுகாப்பதிலே கண்டியை ஆண்ட தமிழ் மன்னர்களுடைய பங்களிப்பு சிறப்பானது. கண்டியின் சிங்களப் பிரதானிகளுடைய சூழ்ச்சிகளாலும், அன்னியருடைய ஆட்சியை அவாவிய துரோகத்தினாலும் தான் கண்டி நாடு தன் சுதந்திரத்தை இழந்தது.

இத்தகைய ஒரு வரலாற்றுப் பின்புலத்தில் 1814 ஆம் ஆண்டு நடை பெற்ற சரித்திர நிகழ்வுகளின் ஓர் ஆவணமாக மணிமகுடம் திகழ்கின்றது. இவ்வரலாற்று நாவலின் பிறிதொரு சிறப்பம்சம் என்னவென்றால் நவரசங்களின் ஒவ்வொரு சுவையையும் ஒவ்வோர் அத்தியாயத்தில் முதன்மைப் படுத்தும் வகையில் ஒன்பது அத்தியாயங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மதுரகவி இ.நாகராஜன் மூன்று அத்தியாயங்களையும், ரசிகமணி கனக செந்திநாதன் மூன்று அத்தியாயங்களையும் எழுத, கடைசி மூன்று அத்தியாயங்களை எழுதி எஸ்.பொ இந் நாவலை முழுமைப்படுத்தியுள்ளார்.

இன்று சிங்கள இன அரசியலால் திருத்தி சரித்திரம் எழுதப்படும் நிலையில், கண்டி அரசின் அஸ்தமன நாட்கள் உரிய முறையில் அறிந்து கொள்வதற்கு இந்த நாவல் உதவுகின்றது. ஈழத்தில் ஒரு காலத்தில் நடைபெற்ற தமிழ் இலக்கிய கூட்டு முயற்சிகளின் ஒரு வரலாற்று ஆவணமாகவும் இந் நூல் தமிழிற்குக் கிடைத்துள்ளது.

3.தீதும் நன்றும்
தீதும் நன்றும்
கணியன் பூங்குன்றனின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற முதல் வரியை அறியாத தமிழர் இல்லை எனலாம். இதனையே தனிநாயகம் அடிகளார் உலகத் தமிழ் அக்கறைகளின் மையக் கோஷம் ஆக்கினார். சர்வதேசிய ஆய்வு அரங்குகளில் இவ்வாசகம் மையப்படுத்தப்படுகிறது. இக்கவிதையின் இரண்டாவது வரி 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பதாகும்.

ஞானம் ஆசிரியர் தி.ஞானசேகரனுடன் எஸ்.பொ நடத்திய இலக்கிய உரையாடலே 'தீதும் நன்றும்' என்ற மகுடத்தில் வெளிவந்துள்ளது.எஸ்,பொவின் 'வரலாற்றில் வாழ்தல்' என்னும் சுயசரிதை சுமார் 2000 பக்கங்களிலே வெளிவந்துள்ளது. அந்நூலில் அவர் குறிப்புட்டுள்ள பல கருத்துக்கள் பற்றியும், நிகழ்வுகள் பற்றியும் பல ஐயப்பாடுகள் எழுப்பப்பட்டிருந்தன, இலக்கிய சேமம் கருதி இந்த சந்தேகங்களுக்கு நேரிய விடைகள் தேவை, இந்த விடைகளைக் காணும் ஒரு இலக்கிய முயற்சியாகவே 'தீதும் நன்றும்' நூல் அமைந்துள்ளது. இதனை ஒரு நேர்காணலாக எஸ்.பொ வகைப்படுத்தவில்லை. எழுப்பப்டும் வினாக்களுக்கு விளக்க விடைகள் அளிக்கும் ஒரு இலக்கிய முயற்சியாகவே அவர் கணிக்கின்றார்.

பிறிதொரு வகையில் 'வரலாற்றில் வாழ்தல்' குறித்த இலக்கிய உரையாடலாகவும் இது தரிசிக்கப்படலாம். 20 நூற்றாண்டின் ஈழ தமிழ் இலக்கிய வரலாற்றை அறிய விரும்பும் ஆய்வு மாணவர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் 'தீதும் நன்றும்' ஒரு கையேடாக பயன்படவல்லது.

ஈழம், எழுத்தாளர், எஸ்.பொ, எஸ்.பொன்னுத்துரை, சிற்றிதழ், புத்தகம்

"இலக்கிய யோகி" எஸ்.பொன்னுத்துரை.

2007-07-07 by விருபா - Viruba | 0 கருத்துகள்
பவள விழா அகவையில் "இலக்கிய யோகி" எஸ்.பொன்னுத்துரை.



தமிழ்ப் புலமையாளர் மத்தியில் தமிழ்க்கலை இலக்கிய வல்லமைகளால் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ள எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) இவ்வாண்டு மே மாதம் 24 ஆம் திகதி தனது பவள விழா அகவையைய எட்டியுள்ளார். அவரை வாழ்த்துவோமாக! தனது வாழ்வை நிரந்தரப்படுத்த முடியாது தமிழன் தடுமாறிக்கொண்டு வாழும் இக்காலகட்டத்தில் எஸ்பொவின் பவள விழாவை முக்கியத்துவப் படுத்த அவர் அப்படி செய்தற்கரியதான எதைச் செய்தார் என இன்றைய சந்ததியினரின் மனதை மட்டுமன்றி முதியோரின் சிந்தயையும் நெருடக்கூடும்.

" தேடல்தான் புதிய அனுபவங்களையும் புதிய தரிசனங்களையும் புதிய விளக்கங்களையும் புதிய ஆர்வங்களையும் புதிய உற்சாகங்களையும் புதிய ஞானத்தையும் கொண்டுவந்து சேர்க்கிறது."

இப்படிச் சொல்பவர் எஸ்.பொ.

அதற்கமைய இன்றும் தமிழ் ஊழியத்தில் தன் தேடலை ஊன்றித் தமிழுக்குப் புதிய பரிணாமத்தையும் புதிய முகத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவைகளே எஸ்.பொவை தமிழ் நெஞ்சங்களில் நிறுத்தி அவரை ஆராதிக்கச் செய்கின்றன.

தமிழ் இலக்கியத்தின் சகல அலகுகளுக்குள்ளும் சுழியோடி முத்துக்களைத் தருபவர். புனைகதை, கவிதை, நாடகம், கட்டுரை, என்ற தமிழக் கூறுகள் இவரது நுணுக்கமான அணுகுமுறைகள் மூலம் மேன்மை கொண்டிருக்கின்றன. தான் தொட்டதெல்லாம் பொன்னாகும் என்ற வகையில் இவர் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் தன்வசப்படுத்தி சாதனை புரிந்திருக்கிறார்.

மரபு, நவீன இலக்கியங்களில் இவரது சாதனைகள் இவரை இந்த நூற்றாண்டின் தலைசிறந்த இலக்கியக்காரராக இனங்காட்டியிருக்கின்றன. மரபை முற்று முழுதாக நிராகரிக்காமலே இலக்கியம் படைக்கிறார். இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியத்திற்கு அளித்த மகாகவி பாரதியார், நவீன சிறுகதையின் பிதாமகன் புதுமைப்பித்தன் ஆகியோருக்கு மிக நெருக்கமாக நிற்கும் எழுத்தாளர் எஸ.பொ.

இவரது எந்தப் படைப்பை எடுத்துக்கொண்டாலும், அதன் வசன நடை விஷயத்தை எடுத்துச் சொல்லும் நுட்பமான பாங்கு, சொல்வளம் என்பன ஏனைய படைப்பாளிகளைப் பின்தள்ளி விட்டு இமயமாக உயர்ந்து நிற்கும். அவைகளை எத்தனை தடவை வாசித்தாலும் சலிக்காது.

இவரது எழுத்துக்களின் இன்னொரு பண்பாக துணிச்சலைக் கூறலாம். அடிக்கடி தனது படைப்புகளில் பரிசோதனைகளைச் செய்து காட்டுபவர். கட்டுடைப்புச் செய்த இவரது எழுத்துக்கள் "பழைய பஞ்சாங்களங்களின்" திட்டுக்களைப் பெற்றது மாத்திரமன்றி இவருக்குப் பல பாதிப்புக்களையும் ஏற்படுத்தியது.

"தீ" என்ற இவரது முதல் நாவல் இவருக்கு "பால் இயல்" எழுத்தாளர் என்ற பெயரைப் பெற வைத்தது. "ஆண்மை" என்ற ஒரே பெயரில் பல கதைகளை எழுதி எஸ.பொ நூலாகவும் வெளியிட்டிருக்கிறார். தனது படைப்புகளுக்கு பெயரிடும் பொழுது எழுத்துச் சிக்கனத்தைக் கடைப்பிடித்து, பொருத்தமாகவும் குறுகியதாகவும் இருக்கப் பார்த்துக் கொள்வார். "தீ", "லீ", "அவா", "வலை", "தேடல்", "மொட்டு", "சடங்கு" இப்படியானவையே அவரது படைப்புகளின் பெயராக இருக்கின்றன.

வாசகனுக்குத் தமிழ்க் கலாச்சார பண்புகளைக் கொடுப்பவையாக இவரது சமூகம் சார்ந்த புனைவுகள் அமைந்திருப்பதைக் காணலாம். மகாவம்சம் போன்ற ஆதிகால வரலாற்றுக்குள் நுளைந்து கல்கியைப் போல் இவரும் பல வரலாற்றுப் படைப்புகளைப் படைத்திருக்கிறார். இவை சம்பந்ப்பட்ட இதிகாசங்களையும் வரலாறுகளையும் விமர்சிப்பவையாகவும் அமைந்திருப்பதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. சுவிசேஷம், திருக்குர்ஆன் என்பவைகளின் போதனைகளையும் தனது புனைவுகளுக்குள் கொண்டு வந்துள்ளார். இவர் தமிழ் நாட்டின் "கல்கி" சஞ்சிகையில் தொடராக எழுதி வந்த கீதைக் கதைகள் இவரது எழுத்துக்கு ஒரு திருப்புமுனை!. "இதை பொன்னுத்துரை எழுதுகிறாரா?" எனப் பழைய தலைமுறை வியந்ததுமுண்டு.

தமிழ்ப் பரப்பில் வேறெந்த அறிஞர்களுக்குமில்லாத மேலதிகத் தன்மையாகப் புனைவுக் கலையைப் பெற்றுள்ளார். இது எஸ்.பொவுக்குக் கிடைத்துள்ள யோகம். இவரது "நனவிடை தோய்தல்" என்ற சுயசரிதை தமிழிற்கு ஒரு நவீன உத்தியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இன்றுவரைக்கான தனது வாழ்வை "வரலாற்றில் வாழ்தல்" என்ற தலைப்பில் 2000 பக்கங்களுக்கு மேலான நூலாக்கி இருக்கிறார்.

ஐம்பதுகளில் அம்பாறையில் தமிழனுக்கு ஏற்பட்ட இடப்பெயர்வை இவர் களரி என்ற சிறுகதையில் பதிவு செய்துள்ளார். இன விரிசலை இலக்கியத்தில் முதன் முதல் காட்டியவர் எஸ்.பொ என்றும் கூறப்படுகிறது.

புலம் பெயர்ந்தோர் இலக்கியம், புகலிட இலக்கியம் என இப்பொழுது சர்வதேசங்களிலும் பரவலாகப் பேசப்படுவதை வாசகர் அறிவர். இந்தப் புது வருகைக்கு ஒரு முகத்தைக் கொடுத்து, அதைப் பரம்பல் செய்வதில் முன் நின்றவர் எஸ்.பொ.

புலம்பெயர்ந்தோர் இலக்கியம்தான் சர்வதேச தமிழ் இலக்கியத்திற்கு தலைமை தாங்குமெனத் தன் குரலை ஓங்க ஒலித்தார். ஒலித் குரலின் காத்திரத்தை கருத்திற்கெடுத்த சர்வதேச நாடுகளில் பனியோடு போராடிக்கொண்டிருக்கும் ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் தமது மூடிக்கிடந்த பேனாக்களை திறக்கத் தொடங்கினர். அதன் அறுவடைதான் இன்று புலம் பெயர்ந்தோர் இலக்கியம் பெருவிருட்சமாகப் பலித்து, அறுசுவை மிக்க கறுத்தக் கொழும்பான் மாங்கனிகளைத் தமிழ் வாசகனுக்குத் தந்து கொண்டிருக்கின்றது. "பனியும் பனையும்" என்ற சிறுகதைத் தொகுப்பின் வருகைக்கும் அத்திவாரமிட்டவர் எஸ்.பொவே!.

எழுத்தாளராக மட்டுமின்றி எஸ.பொ இலக்கிய நூல் வெளியீட்டாளராகவும் தனது தமிழ்ப் பணியை அகலித்துள்ளார். மிகச் செழிப்பாகச் சென்னையில் இயங்கிக்கொண்டிருக்கும் "மித்ர ஆர்ட் அன் கிரியேஷன்ஸ்" என்ற நூல் வெளியீட்டகம் எஸ.பொவுக்குச் சொந்தமானதே. இதனூடாகத் தனது சொந்த மண்ணான ஈழத்தின் அரிய தமிழ் நூல்களோடு நிமிரத் துடிக்கும் தமிழ் உறவுகள் வாழும் மண்ணிலிருந்து கிளம்பும் இலக்கிய எத்தனிப்புக்களையும் சர்வதேசத் தமிழ் சமூகம் அறிவதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த வகையில் அவர் வெளியிட்டிருக்கும் "மலேசியச் கதைகள்" எஸ்.பொவை சர்வதேசத் தமிழனின் நெஞ்சில் பதிய வைத்திருக்குமெனலாம்.

ஈழத்து இலக்கிய மனையைத் தமிழ் நாட்டு இலக்கியத்திற்குச் சவாலாக உள்நாட்டில் யார் யாரோடு இணைந்து செயல்பட்டாரோ, பிற்காலத்தில் அவர்களோடு முரண்பட்டார். தனித் தீவானார். "அரசியல் போக்கிரிகளின் கடைசி உறைவிடம்" என்ற கருத்து நிலைக்குத் தேறிய பின்னர் அவர் இலக்கியத்தில் அரசியல் கலக்கக் கூடாதென முழங்கினார். ஆனால் அப்போது ஈழத்து இலக்கியத்தை நெறிப்படுத்தி ஆளுகை செய்து கொண்டிருந்த முற்போக்கு இலக்கிய இயக்கம் தனது அரசியல் செல்வாக்கை நம்பி அதை மறுத்தது. பெரும்பான்மை தனக்கில்லாத போதும் தனது இல்கியச் செழுமையை பலமாகக் கொண்டு ஜனநாயக முறைமையையும் பொருட்படுத்தாது தனித்து நின்று எதிர்த்தார்.

இதற்காக அச்சு ஊடகத்தையும் மேடையாகவும் பயன்படுத்தினார். "இளம்பிறை" எம்.ஏ.ரஹ்மான், அமரர்களானரே.ஜே.கனகரத்னா, கனகசெந்திநாதன், ஆகியோர் எஸ்.பொவை ஒட்டுமொத்தமாக ஆதரிக்காது விட்டாலும் அன்றைய முற்போக்கின் இலக்கியப் போக்கை ஆதரிக்காதிருந்தனர்.

பிரபல இலக்கியவாதியான மு.தளையசிங்கமும் எஸ்.பொவைப் போல் தனது இலக்கியக் கொள்கையை வெளிப்படுத்தினார். அந்தச் சமரில் யார் வென்றாரென்பதை இன்றைய இலக்கிய உலகு நன்கு அறியும். எஸ.பொ இன்றும் நிமிர்ந்தே நிற்கின்றார். அவர் ஈழத்து இலக்கிய செல்நெறிக்குக் கொடுத்த அதிர்வுகள் இன்று இலக்கியமாகிக் கொண்டிருக்கின்றன. இதன் வீச்சு எதிர் முகாமுக்குள்ளும் இன்று நுழைந்துவிட்டது. அம்முகாம்களும் விழிப்புக் கொண்டு எஸ்.பொவின் இலக்கியக் கருத்துக்களை சிந்திக்கத் தொடங்கிவிட்டன. இது எஸ.பொவின் தூர நோக்கிற்கு எடுத்துக்காட்டல்லவா. முற்போக்கு ஒரு கருத்துநிலை அது மாறக்கூடியதென இன்று கருதுவோர் அன்று அரசியலுக்குப் பயந்தா எஸ்.பொவுக்கு தூரநின்றனர்.

ஆறுமுக நாவலர், சுவாமி ஞனப் பிரகாசர் ஆகிய தமிழ்ப் பெரியார்கள் தோன்றிய நல்லூர்ப் பிராந்தியத்தில் ஒடுக்கப்பட்ட குடும்பமொன்றில் எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) பிறந்தார். புனித பத்திரிசியார் கல்லூரி, பரமேஸ்வராக் கல்லூரி என்பவற்றில் கற்றார். பொதுவுடமைக் கட்சியின் ஈடுபாடு இவரை பத்திரிசியார் கல்லூரியிலிருந்து விலகச் செய்தது. என்.கே.ரகுநாதன், செ.கணேசலிங்கன் ஆகியோரும் இவரது சமகாலத்தவராக பரமேஸவராக் கல்லூரியில் கற்றனர். தமிழ்நாடு சென்று கலைமாமணிப் பட்டத்தைப் பெற்றார். இவருக்கு ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் ஆசிரியப் பணி கிடைத்தது. அங்கு நிலவிய சாதிய ஒடுக்குமுறையால் வெறுப்படைந்து யாழ் குடாவைத் துறந்து கம்பளை, கொழும்பு மட்டக்களப்பு போன்ற இடங்களில் தனது ஆசிரியப் பணியை மேற்கொண்டார். பாடவிதான சபை, திரைப்படக் கூட்டுத்தாபனம் என்பவற்றிலும் எஸ்.பொ கடமை புரிந்தார். அப்போது அரசுக்கு அனுசரணையாக இருந்த தமிழ் அதிகாரிகள் இந்நிறுவனங்களில் இவர் கடமை புரிவதற்கு இடைஞ்சலாக இருந்தனர். வன்மங்கள் பாராட்டத் தொடங்கினர். இவரது கல்விக் கொள்கைக்கு "எஸ்.பொ இசம்" என்ற முத்திரையிட்டு இவரது உழைப்பை நிராகரித்தனர். தனது வீட்டிற்குள் அரசியல் பலம் இருந்தும் எஸ்.பொ அதைத் தனது எதிராளிகளுக்கு எதிராகப் பாவிக்கவில்லை. ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்று ஸம்பியாவிற்குச் சென்றார். பின் அவுஸ்திரேலியா சென்று, அங்கும் இந்தியாவிலுமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

ஆக தமிழையும் எளிமையையும் தனது வாழ்வாக நச்சி வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் இலக்கியப் பிரம்மா 'எஸ்.பொ காலம்' தமிழ் இலக்கியத்திற்கு மலர்ச்சியையும் உயர்ச்சியையும் உபசரித்ததென்பது மெத்தச் சரியானதே.

கானலைக் காட்டி, இலக்கிய உலகை ஏமாற்றிக் கொண்டிருந்த குழுமத்தை வாசகனுக்கு இனங்காட்டி, நெறிப்படுத்தி, நன்னீர் அருவிகளைத் தமிழ் இலக்கியத்தில் பாயவைத்து, தமிழ் இலக்கியத்தை நிமிர வைத்திருக்கும் எஸ்.பொன்னுத்துரையின் பவள விழா அனைத்துத் தமிழுலகத்துக்குமான தமிழ் விழாத்தான். அதை குதூகலாமாகக் கொண்டாடி மகிழ்வது நாம் தமிழுக்குச் செய்யும் பெருந்தொண்டாகும் .

- - -வீரகேசரி இணைப்பான (16.06.2007) கலைக்கேசரியில் சமரசன் - - -

எழுத்தாளர், எஸ்.பொ, எஸ்.பொன்னுத்துரை, பவள விழா

இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

சிறப்புடைய இடுகை

பேர்சிவல் பாதிரியாரால் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பழமொழிகள் (Tamil Proverbs Compiled by Rev. Peter Percival)

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

  • #iatr (2)
  • 2008 புத்தகத்திருவிழா (23)
  • 2009 புத்தகத்திருவிழா (5)
  • 2010 Chennai Book Fair (2)
  • 2011 Chennai Book Fair (1)
  • அகரவரிசை (1)
  • அகராதி (5)
  • அகிலன்.த (1)
  • அரசுடமை (1)
  • அறிமுகம் (8)
  • அறிவியல் புனைவு (1)
  • இணையம் (9)
  • ஈழத்து இலக்கியம் (2)
  • ஈழம் (5)
  • எ-கலப்பை (1)
  • எழுத்தாளர் (3)
  • எஸ்.பொ (2)
  • எஸ்.பொன்னுத்துரை (2)
  • கண்காட்சி (23)
  • கணிச்சுவடி (1)
  • காந்திஜி (1)
  • கால்டுவெல் (1)
  • சாகித்ய அகாதமி (1)
  • சிற்றிதழ் (16)
  • சுஜாதா (1)
  • சென்னையின் ஆரம்பகாலப் பதிப்புகள் (1)
  • சொல்லாய்வு (1)
  • தமிழ் (1)
  • தமிழ் இணையம் (2)
  • தமிழ்99 (1)
  • தமிழக அரசின் பரிசு (4)
  • தரவுதளம் (1)
  • தனிநாயக அடிகளார் (2)
  • தாய்மொழி (1)
  • திருத்தம் (1)
  • து.உருத்திரமூர்த்தி (1)
  • தொல்தமிழ் (1)
  • நெடுங்கணக்கு (1)
  • நெய்வேலி (1)
  • பட்டறை (2)
  • படங்காட்டல் (1)
  • பவள விழா (1)
  • பழமொழிகள் (1)
  • புத்தக வரலாறு (1)
  • புத்தகம் (4)
  • புதிய இதழ் (1)
  • புதிய புத்தகம் (24)
  • பேர்சிவல் (1)
  • பொருள் நூறு (1)
  • போட்டி (2)
  • போட்டிக்கு (1)
  • மலாயா இடப்பயர்வு (2)
  • மறுப்பு (1)
  • மஹாகவி (1)
  • மானிப்பாய் அகராதி (1)
  • முன்வெளியீடு (1)
  • யாழ்ப்பாண அகராதி (1)
  • வலைப்பதிவுலகம் (1)
  • விருது (1)
  • விருபா (1)
  • வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம் (1)
  • A History of Tamil Dictionaries (1)
  • BlogDay2008 (1)
  • Caldwell (1)
  • Chennai Book Fair 2010 (2)
  • Colporul (1)
  • DRAVIDIAN (1)
  • Gregory James (2)
  • Jaffna Library (1)
  • Rev. Peter Percival (1)
  • V.S.Thurairajah (1)

Total Pageviews

Copyright © 2010 விருபா Wordpress Theme Blogger Template Credits For